மியான்மாரில் கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் உறவினர்கள் மியான்மாரில் கைதிகளின் விடுதலைக்காக காத்திருக்கும் உறவினர்கள் 

நற்செய்தியின் சக்தியால், மனிதம் நிறைந்ததாய் சிறைகள்...

கோவிட்-19 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துள்ள இவ்வேளையில், இவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்குமாறு வழிசெய்யப்படவேண்டும் - அருள்பணி Tejado Muñoz

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த 2020ம் ஆண்டு, அனைவருக்கும், குறிப்பாக, சிறைக்கைதிகளுக்கு, நூறுமடங்குக்கு மேலாக, மிகவும் குழப்பம் நிறைந்த ஆண்டாக உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் நேரடி பொதுச்செயலர் அருள்பணி Segundo Tejado Muñoz அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், சிறைக் கைதிகளுக்கு ஆற்றப்பட்ட மேய்ப்புப்பணிகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்தபோது இவ்வாறு கூறினார்.

சிறைவாழ்வு, கொரோனா தொற்றுநோய் ஆகிய இரு தண்டனைகளால், தங்கள் குடும்பங்களோடு தொடர்பின்றி இருந்தாலும், சிறைப்பணியாற்றும் மருத்துவ ஆன்மீக அருள்பணியாளர்கள், சிறையிலுள்ள சகோதரர், சகோதரிகளை, இணையம் வழியாக,  தவறாமல் சந்தித்துவந்தனர் என்று, அருள்பணி Tejado Muñoz அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த அருள்பணியாளர்கள், இணையம் வழி 35 வலைக்காட்சி கருத்தரங்குகளை நடத்தியுள்ளனர் என்றும், அவை வழியாக அவர்களுக்குத் தேவையான ஆன்மீக, அறநெறி மற்றும், பொருளாதார உதவிகளை வழங்கினர் என்றும் கூறிய அருள்பணி Tejado Muñoz அவர்கள், இம்மாதிரியான கருத்தரங்குகளை, வருகிற சனவரியிலும் தொடரவுள்ளதாகத் தெரிவித்தார்.

கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்துள்ள இவ்வேளையில், இவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்குமாறு வழிசெய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அருள்பணி Tejado Muñoz அவர்கள், எந்தவொரு துன்பம் நிறைந்த சூழலிலும், நம் ஆண்டவர் எப்போதும் நம்மோடு இருக்கின்றார் என்ற உணர்வு, நம் அனைவருக்கும் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக்கைதிகளுக்கு எப்போதும் தன் அருகாமை மற்றும், அன்பைத் தெரிவித்துவருகிறார் என்றும் கூறிய அருள்பணி Tejado Muñoz அவர்கள், படைப்பாற்றல்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை, இந்த பெருந்தொற்று காலத்தில் கைதிகள் நன்கு புரிந்துவைத்துள்ளனர் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 December 2020, 15:05