மாற்றுவழியில் சிந்திக்க, “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்”
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், அசிசி நகரில் நடைபெறும் கணணி வழி கூட்டத்தில் ஒரு முக்கிய பங்கேற்பாளரான Vandana Shiva அவர்கள், இந்தக் கருத்தரங்கைக் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ திருமடலைக் குறித்தும் வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வுக்கு வழங்கிய ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், பல்வேறு நிலைகளில் மிக மோசமான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் இன்றைய சமுதாயத்திற்கு, திருத்தந்தை வழங்கும் பொருளாதாரச் சிந்தனைகள் பெரும் உதவியாக இருக்கும் என்று Vandana Shiva அவர்கள் கூறினார்.
கடவுளின் படைப்பை மதித்து போற்றி காக்க வேண்டும் என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Laudato si’ திருமடல் வலியுறுத்துவது போலவே, இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய வேத நூல்கள் கூறியுள்ளன என்பதை எடுத்துரைத்த Vandana Shiva அவர்கள், படைப்பின் மீதும் அயலவர் மீதும் அக்கறை காட்டவேண்டும் என்பதை அனைத்து உண்மையான மதங்களும் கூறுகின்றன என்று கூறினார்.
படைப்பில் காணப்படும் பல்லுயிர் வளத்தைக் காப்பதற்கென Vandana Shiva அவர்கள், உருவாக்கிய Navdanya என்ற இயக்கம், பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
படைப்பில் உள்ள விதைகளுக்கு உரிமங்களைப் பெறும் நோக்கத்துடன் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநல போக்குகளை தடுக்க Vandana Shiva அவர்கள், உருவாக்கிய Navdanya இயக்கம், விதைகளைக் காக்கும் வழிகளை குறிப்பாக பெண்களுக்கு கற்றுத்தருவதைக் குறித்து இப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழலையும், படைப்பையும் காப்பதற்கு அண்மைக் காலங்களில் இளையோர் முன்வந்திருப்பது ஆறுதலாக உள்ளது என்று கூறிய Vandana Shiva அவர்கள், “பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற இக்கருத்தரங்கு போன்ற முயற்சிகள் இளையோருக்கு மாற்றுவழியில் சிந்திக்கும் வழிகளைக் காட்டும் என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்