பானமா உலக இளையோர் நாளைப் பற்றிய இணையதள இதழ் பானமா உலக இளையோர் நாளைப் பற்றிய இணையதள இதழ் 

பானமா உலக இளையோர் நாள் - இணையதள இதழ்

பானமா நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைப் பற்றிய இணையதள இதழை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, அண்மையில் வெளியிட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி முடிய பானமா நாட்டின், பானமா நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாளைப் பற்றிய இணையதள இதழை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை, அண்மையில் வெளியிட்டுள்ளது.

இரண்டாம் ஜான்பால் இளையோர் அறக்கட்டளை உருவாக்கியுள்ள இந்த இதழ், ஆங்கிலம், இஸ்பானியம், பிரெஞ்சு, இத்தாலியம் ஆகிய மொழிகளில், 116 இணையதள பக்கங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகள் இந்த ஆண்டிதழை வெளியிட்டு வரும் இந்த அறக்கட்டளை, இவ்வாண்டு, முதல்முறையாக, தன் 25வது இதழை, அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய வண்ணம், ஒரு வலைத்தள இதழாக வெளியிட்டுள்ளது.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato si’ திருமடலின் 5ம் ஆண்டு நினைவையொட்டி, "நம் பொதுவான இல்லத்திற்காக இளையோர்: செயல்வடிவில் சூழலியல் மனமாற்றம்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கின் பகிர்வுகளையும், பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை தன் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

1985ம் ஆண்டு திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்ட உலக இளையோர் நாள் நிகழ்வுகள், உலகின் பல நாடுகளில் இரண்டு அல்லது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

பானமா உலக இளையோர் நாளுக்கு அடுத்ததாக, போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நடைபெறவிருந்த உலக இளையோர் நாள் நிகழ்வுகள், கோவிட் 19 நெருக்கடியின் விளைவாக, 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2020, 14:47