ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன்  

கோவிட் 19க்குப்பின் திருஅவை உருவாக்கும் எதிர்காலம்

தொற்றுக்கிருமியின் விளைவுகளிலிருந்து ஐரோப்பா மீண்டுவரும் வேளையில், அமெரிக்க கண்டம், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் நிலை வேறுபட்டதாக உள்ளது - கர்தினால் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து இவ்வுலகம் சிறிது சிறிதாக வெளியேறிக்கொண்டிருக்கும் வேளையில், எதிர்காலத்தை, கத்தோலிக்கத் திருஅவை எவ்வாறு கண்ணோக்கும் என்ற கருத்தை மையப்படுத்தி, ஜூன் 9 இச்செவ்வாயன்று வத்திக்கான் செய்தித்துறை ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தியது.

"கோவிட் 19 நேரத்தில், தலத்திருஅவைகளின் வழியே, எதிர்காலத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில், இணையதளம் வழியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், உலக காரித்தாஸ் அமைப்பின் பொதுச்செயலர் திருவாளர் அலாய்ஸியஸ் ஜான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த தொற்றுக்கிருமியின் விளைவுகளிலிருந்து ஐரோப்பா மீண்டு வரும் வேளையில், அமெரிக்க கண்டம், குறிப்பாக, இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் நிலை வேறுபட்டதாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் டர்க்சன் அவர்கள், அனைத்து நாடுகளுக்கும் சமமான உதவிகள் கிடைத்தால் மட்டுமே, இந்த நெருக்கடியை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்கமுடியும் என்று கூறினார்.

காரித்தாஸ் அமைப்பு, உலகெங்கிலும் 20க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளது என்பதைக் குறித்து பேசிய ஜான் அவர்கள், இந்த செயல்திட்டங்களில், குழந்தைகள், பெண்கள் மற்றும் சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இந்தியாவில் கொண்டுவரப்பட்ட முழு அடைப்பினால், மிக அதிகமான துன்பங்களை அடைந்துவரும் புலம்பெயர் தொழிலாளிகளுக்குத் தேவையான அடிப்படை உதவிகள் செய்வது, இந்திய காரித்தாஸின் முதன்மைப்பணியாக உள்ளது என்பதை, ஜான் அவர்கள், தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டார்.

சரியான தகவல்களை வழங்குதல், மிகவும் நலிந்த சமுதாயத்தினருக்கு உணவும் உறைவிடமும் வழங்குதல், மற்றும், இந்த தொற்றுக்கிருமியின் தாக்கத்தைக் குறைக்கத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்குதல் ஆகிய மூன்று வழிகளில் காரித்தாஸ் தன் கவனத்தை திருப்பியுள்ளது என்பதையும், காரித்தாஸ் பொதுச் செயலர் ஜான் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2020, 15:24