ஒப்புரவு அருளடையாளத்தை பெறும் திருத்தந்தை ஒப்புரவு அருளடையாளத்தை பெறும் திருத்தந்தை 

“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை” மேய்ப்புப்பணி கையேடு

"ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்" என்ற இவ்வாண்டின் செபமுயற்சியின் மையப்பொருள் மன்னிப்பு. இந்த செபமுயற்சிக்கு உதவியாக, மார்ச் 29ம் தேதி மாலை முதல், மார்ச் 30ம் தேதி முழுவதும், அனைத்து ஆலயங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

"ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்" என்ற செபமுயற்சிக்கு உதவும் நோக்கத்தில், புதியவழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை, “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை” என்ற தலைப்பில், மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைத்து பங்குத்தளங்களும், திருஅவை குழுமங்களும், துறவற சபைகளும், இந்த செபமுயற்சியை சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக, இந்த மேய்ப்புப்பணி கையேடு வெளியிடப்பட்டுள்ளது என, புதியவழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை கூறியுள்ளது.

இவ்வாண்டில், மன்னிப்பு என்பதை மையப்படுத்தி இச்செபமுயற்சி நடைபெறும் என்றும், இச்செபமுயற்சியில் திருநற்கருணை ஆராதனை மற்றும் ஒப்புரவு அருளடையாள வழிபாடுகளில் விசுவாசிகள் கலந்துகொள்வதற்கு உதவியாக, மார்ச் 29, வெள்ளிக்கிழமை மாலை முதல், மார்ச் 30, சனிக்கிழமை முழுவதும் அனைத்து ஆலயங்களும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும், அத்திருப்பீட அவை கூறியுள்ளது.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு இந்தப் பக்தி முயற்சியை, மார்ச் 29, வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நிறைவேற்றுவார்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, 2016ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது கடிதத்தில், ஒப்புரவு அருளடையாளம், கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு உதவியாக, தவக்காலத்தில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சி பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 March 2019, 15:10