திருத்தந்தை: பகிர்தல், புறக்கணிப்பு கலாச்சாரத்தை முறியடிக்கிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மத வேறுபாடுகள், புறக்கணிப்பை அல்லது பகைமையை நியாயப்படுத்த முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி (#Peace) என்ற ஹாஷ்டாக்குடன், மே 30 இத்திங்களன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“மத வேறுபாடுகள், புறக்கணிப்பை அல்லது பகைமையை நியாயப்படுத்த முடியாது, மாறாக, போர் மற்றும், வெறுப்பு ஆகிய தீமைகளுக்குமுன்னர் மௌனமாக இருப்பதைவிடுத்து, மத நம்பிக்கையின் அடிப்படையில், அமைதியை உருவாக்கும் சக்திபடைத்தவர்களாக நாம் மாறவேண்டும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இஸ்லாமியக் கல்வியின் தலைவர் L’Ayatollah Alireza Arafi, கஜகஸ்தான் குடியரசின் உதவிப் பிரதமர் மற்றும், வெளியுறவு அமைச்சராகிய Mukhtar Tileuberdi ஆகிய இருவரும், இத்திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினர்.
இறைபராமரிப்பின் ஏழைகள் பணியாளர்
இன்னும், இறைபராமரிப்பின் ஏழைகள் பணியாளர் இருபால் துறவு சபைகள் நடத்திய பொதுப் பேரவையில் பங்குபெற்ற பிரதிநிதிகளையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இறைபராமரிப்பு நற்செய்தியின்படி வாழ்கின்ற அவ்விரு சபைகளையும் ஆரம்பித்த புனித ஜொவான்னி கலாபிரியா அவர்களின் தனிவரத்தைத் தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.
சமுதாயத்தில் புறக்கணிப்பட்டோருக்குப் பணியாற்றும் இச்சபையினருக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, மற்றவர் மீது அக்கறை காட்டும் மக்கள் தேவைப்படுகின்றனர். அதனால் எவரும் அடிப்படை வசதிகளின்றி விடப்படமாட்டார்கள் என்று கூறினார்.
சமுதாயத்தில் பரவியுள்ள புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு மாற்று மருந்து, இறைபராமரிப்பு கலாச்சாரம் என்றுரைத்த திருத்தந்தை, இறை பராமரிப்பில் பிள்ளைக்குரிய முறையில் முழுவதும் கையளித்து, இறைநம்பிக்கையில் தொடர்ந்து பணிகளை ஆற்றுமாறு அச்சபையினரைக் கேட்டுக்கொண்டார்.
ஏழைகள் மற்றும், நோயாளிகளைப் பராமரிப்பதற்கென்று இவ்விரு சபைகளையும் தொடங்கிய புனித ஜொவான்னி கலாபிரியா அவர்கள், 1999ம் ஆண்டில் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்