சிலுவையில் அறையுண்ட இயேசு சிலுவையில் அறையுண்ட இயேசு 

இயேசுவின் சிலுவை, இறைவனின் மௌன அரியணை

புனித வெள்ளியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஏப்ரல் 2, சிறப்பிக்கப்பட்ட புனித வெள்ளியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டிருந்தார்.

"அன்பு, தியாகம், மற்றும் தன்னையே முழுவதும் வழங்குதல் ஆகியவற்றை சிலுவை வெளிப்படுத்துகிறது. இது உண்மையிலேயே மிக அதிகமான நிறைவை வழங்கும் 'வாழ்வின் மரம்'" என்ற சொற்களை, திருத்தந்தை தன் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

"இயேசுவின் சிலுவை, இறைவனின் மௌன அரியணை. அவரது காயங்களை ஒவ்வொருநாளும் தியானிப்போம். அந்தக் காயங்களில் நம் வெறுமையையும், நம் பாவத்தையும் உணர்கிறோம். அவர் மீது சுமத்தப்பட்ட காயங்களால் நாம் குணமடைந்துள்ளோம்" என்ற சொற்களுடன் தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார் திருத்தந்தை.

"மற்ற அனைத்தையும் சக்தியிழக்கச் செய்யும் அன்பின் சக்தியுடன், சிலுவையிலிருந்து இறைவன் ஆட்சி செய்கிறார். அவர் நம் உள்ளங்களையும் சிந்தனையையும் வியப்பில் ஆழ்த்துகிறார். இந்த வியப்பினால் நிறைவதற்கு நம்மையே அளிப்போம். சிலுவையில் அறையுண்ட அவரைப் பார்த்து, 'நீர் உண்மையாகவே இறைவனின் மகன்', நீர் உண்மையிலேயே இறைவன் என்று சொல்வோம்" என்ற சொற்களை, தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 April 2021, 18:14