வறியோருக்குத் தொண்டுபுரிவதால் இறையாசீர்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
“நமது இறைவேண்டல், வறியோருக்குத் தொண்டுபுரிவதோடு இணைந்து வருகின்றபோது, ஆண்டவரின் ஆசீர் நம்மீது இறங்கி வருவதற்கு, அது துணைபுரியும்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 14, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் நான்காவது வறியோர் உலக நாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் உலக நாள் (#WorldDayOfThePoor) என்ற ஹாஷ்டாக்குடன் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், இந்த டுவிட்டர் செய்தியுடன், நான்காவது வறியோர் உலக நாளுக்கு, திருத்தந்தை வெளியிட்டுள்ள செய்தியை வாசிப்பதற்கு உதவும் இணையபக்கத்தின் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.vatican.va/content/francesco/en/messages/poveri/documents/papa-francesco_20200613_messaggio-iv-giornatamondiale-poveri-2020.html
கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் நிறைவில், 2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Misericordia et Misera என்ற திருத்தூது மடலில், அவர், வறியோர் உலக நாளை அறிவித்தார். இந்த உலக நாள், 2017ம் ஆண்டிலிருந்து, ஆண்டின் பொதுக்காலம் 33ம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.
நவம்பர் 15, இஞ்ஞாயிறன்று “ஏழைக்கு உன் கரத்தை நீட்டு” (சீராக். 7:32) என்ற தலைப்பில், நான்காவது வறியோர் உலக நாள் சிறப்பிக்கப்படுகின்றது.
மேலும், பிரான்ஸ் நாட்டின் "Congrès Mission" என்ற அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்றையும், இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை சந்தித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்