திருத்தந்தை பிரான்சிஸ், ஆப்ரிக்க மறைப்பணி சபை தலைவர் அருள்பணி அந்தோனி, அருள்பணி Maccalli  திருத்தந்தை பிரான்சிஸ், ஆப்ரிக்க மறைப்பணி சபை தலைவர் அருள்பணி அந்தோனி, அருள்பணி Maccalli  

திருத்தந்தை, அருள்பணி Maccalli சந்திப்பு

2018ம் ஆண்டில், ஆப்ரிக்காவில் கடத்தப்பட்டு, கடந்த மாதத்தில் விடுதலைசெய்யப்பட்ட, இத்தாலிய மறைப்பணியாளர் அருள்பணி Pierluigi Maccalli அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டின் யாங்கூன் உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி Noel Saw Naw Aye அவர்களை, நவம்பர் 10, இச்செவ்வாயன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

யாங்கூன் துணை ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி Naw Aye அவர்கள், இந்நாள் வரை யாங்கூன் உயர்மறைமாவட்டத்தின் பொருளாளராகவும், யாங்கூனில் அமைந்துள்ள அருள்பணித்துவ இறையியல் கல்லூரியில் விவிலியப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார்.

1969ம் ஆண்டில் யாங்கூன் உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த Saukwaigyi கிராமத்தில் பிறந்த புதிய யாங்கூன் துணை ஆயர் Naw Aye அவர்கள், 1995ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்கென திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் நியு யார்க் நகரில், விவிலியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பவர்.

அருள்பணி Maccalli, திருத்தந்தை சந்திப்பு

மேலும், 2018ம் ஆண்டில், ஆப்ரிக்க நாடான நைஜரில் கடத்தப்பட்டு, கடந்த மாதத்தில் மாலி நாட்டில் விடுதலைசெய்யப்பட்ட, இத்தாலி நாட்டவரான அருள்பணி Pierluigi Maccalli அவர்கள், நவம்பர் 09, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, வத்திக்கானில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தது பற்றி வத்திக்கான் செய்தித் துறையிடம் பேசிய, 59 வயது நிரம்பிய அருள்பணி Maccalli அவர்கள், திருத்தந்தை தன் கரங்களைக் குலுக்கியதோடு, அவற்றை முத்தி செய்தார் என்றும், இதனை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

ஆப்ரிக்க மறைப்பணி சபையைச் சார்ந்த அருள்பணி Maccalli அவர்கள், நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், புர்க்கீனா ஃபாசோ நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள, ஒதுக்குப்புறமான பங்குத்தளத்தில் பணியாற்றி வந்தார். அவர், அந்த பங்குத்தளத்தில், 2018ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதிக்கும், 18ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், அல்கெய்தா அமைப்போடு தொடர்புடைய இஸ்லாம் புரட்சியாளர்களால் கடத்தப்பட்டார். இவர், கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி மாலி நாட்டில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 November 2020, 15:13