வத்திக்கான் நீதித் துறையினருடன் திருத்தந்தை வத்திக்கான் நீதித் துறையினருடன் திருத்தந்தை 

வத்திக்கான் நீதிபதிகளுக்கு மேலும் அதிகாரங்கள்

வத்திக்கானில் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கையும், ஓய்வுபெறும் வயது வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நீதித்துறை குறித்து 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மாற்றத்தைப் புகுத்தி, புதிய சட்டத்திருத்தம் ஒன்றை கொணர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நகர் நீதிபதிகளுக்கு மேலும் அதிகாரங்கள், அமைப்புமுறைகளில் எளிமை, குற்ற ஆய்வுத்துறைக்கும், நீதித்துறைக்கும் இடையே இடைவெளி, போன்றவற்றை உறுதிசெய்யும் இப்புதிய சட்டம், கடந்த 20 ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாற்றங்களுக்கு இயைந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தைக்கும், வத்திக்கான் சட்டங்களுக்கும் மட்டுமே கட்டுப்படும் இந்த நீதிபதிகள், அவர்களின் பணிக்காலத்தின்போது, வத்திக்கான் குடியுரிமை பெற்றவர்களாகச் செயல்படுவர் எனவும், எவ்வித பாகுபாடுமின்றி நீதி வழங்கும் உரிமை மீண்டும் உறுதிசெய்யப்படுவதாகவும் உரைக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கையும், இப்புதிய சட்டம் வழியாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பு 74லிருந்து 75ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், நீதித்துறை ஆண்டு, ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து துவங்கும் என்பதும் புதிய சட்டத்திருத்தத்தின் வழியே நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2020, 15:02