திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் - 13.03.2013 திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் - 13.03.2013 

நம்மோடு பயணிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஒவ்வொரு நாளும், ஒரு சிறிய விசுவாசிகள் குழுவுக்கு, அன்றைய நாளின் இறைவார்த்தை குறித்த சிந்தனைகளை, மறையுரை வழியாக திருத்தந்தை வெளிப்படுத்துகையில், அவர் பங்குத்தந்தையாக மாறுகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த உலகம் கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடியால் கடுமையான சவால்களை எதிர்கொண்டுவரும் இவ்வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், தலைமைப் பணியின் எட்டாம் ஆண்டு ஆரம்பமாகின்றது என்று, திருப்பீட தகவல்தொடர்பு அவையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

திருத்தந்தையின் ஏழு ஆண்டுகள் தலைமைப்பணி நிறைவுபெறும் இவ்வெள்ளியன்று கருத்து தெரிவித்துள்ள, திருப்பீட தகவல்தொடர்பு அவையின் செய்திப்பிரிவு இயக்குனர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தையின் தலைமைப்பணியின் எட்டாம் ஆண்டு, மற்ற ஆண்டுகளைவிட, இவ்வாண்டு வித்தியாசமாகத் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த இன்னல் நிறைந்த சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அனைவரையும் அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து நமக்காகச் செபிக்கின்றார் மற்றும், சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றுகிறார் என்று தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

திருத்தந்தை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் ஒவ்வொரு நாளும் நிறைவேற்றும் திருப்பலி, அவரது தலைமைப்பணியின் சாதனைகளில் ஒன்று என்றும், ஒவ்வொரு நாளும், ஒரு சிறிய விசுவாசிகள் குழுவுக்கு, அன்றைய நாளின் இறைவார்த்தை குறித்த சிந்தனைகளை, மறையுரை வழியாக திருத்தந்தை வெளிப்படுத்துகையில், அவர் பங்குத்தந்தையாக மாறுகிறார் என்றும், தொர்னியெல்லி அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி பரவுவதற்குத் தொடங்குமுன்னர், திருநீற்றுப்புதன் திருவழிபாட்டில், திருத்தந்தை கூறியதைக் குறிப்பிட்டுள்ள தொர்னியெல்லி அவர்கள், நாம் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக, ஒப்புரவாக்கப்பட்டவர்களாக வாழ்வற்கு நம்மை அனுமதிப்போம் என்ற திருத்தந்தையின் மறையுரையையும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2020, 15:17