கர்தினால்கள் அவைத் தலைவர் - கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே கர்தினால்கள் அவைத் தலைவர் - கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே 

கர்தினால்கள் அவையின் புதிய தலைவர், கர்தினால் ரே

கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே (30,சன.1934) அவர்கள், 2000மாம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை ஆயர்கள் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றியவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கர்தினால்கள் அவைத் தலைவராக, கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களும், அதன் துணைத் தலைவராக, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஒப்புதலை வழங்கியுள்ளார். 

சனவரி 18ம் தேதி, கர்தினால்கள் அவைத் தலைவராக, கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே அவர்களும், சனவரி 24ம் தேதி, துணைத் தலைவராக, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இத்தாலியரான கர்தினால் ஜொவான்னி பத்திஸ்தா ரே (30,சன.1934) அவர்கள், 2001ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். இவர், 2000மாம் ஆண்டு முதல், 2010ம் ஆண்டு வரை ஆயர்கள் பேராயத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவராவார். 

அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவி அரசுத்தலைவர் சந்திப்பு

மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவி அரசுத்தலைவர் Mike Pence அவர்கள், சனவரி 24, இவ்வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் கலந்துரையாடினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மனித வாழ்வுக்கு ஆதரவாகப் பேரணிகள் நடைபெற்றுள்ளவேளை, இச்சந்திப்பில், திருத்தந்தையும், Pence அவர்களும், வாழ்வை ஆதரிப்பதில் திருஅவையின் அர்ப்பணம் பற்றி கலந்துரையாடினர் என்று கூறப்பட்டுள்ளது. 

2011ம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவி அரசுத்தலைவர் Joe Biden அவர்கள், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 January 2020, 16:00