பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அன்டனிசாமி சவரிமுத்து பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அன்டனிசாமி சவரிமுத்து 

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயர்

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அன்டனிசாமி சவரிமுத்து அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நியமித்துள்ளார்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அன்டனிசாமி சவரிமுத்து அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20 இப்புதனன்று நியமித்துள்ளார்.

1960ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்த அன்டனிசாமி அவர்கள், மதுரையிலுள்ள அருள்பணித்துவ இளம்நிலை பயிற்சி இல்லத்தில் சேர்ந்து, பின்னர், பெங்களூருவில், மெய்யியல் மற்றும் இறையியலை பயின்றார்.

1987ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணி அன்டனிசாமி அவர்கள், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மாநகரில், திருஅவை சட்டங்களில் முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரை, மற்றும் பெங்களூரு அருள்பணித்துவ பயிற்சி இல்லங்களில் விரிவுரையாளராகவும், அதிபராகவும் பணியாற்றிய அருள்பணி அன்டனிசாமி அவர்கள், 2004ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு முடிய, பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் முதன்மை அருள்பணியாளராகவும் பணியாற்றினார்.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயராக 2000மாம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பணியாற்றிய ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் அவர்கள், 2018ம் ஆண்டு, ஜூன் 29ம் தேதி பணிஓய்வு பெற்றதற்குப் பின்னர், தற்போது, அருள்பணி அன்டனிசாமி சவரிமுத்து அவர்கள், அம்மறைமாவட்டத்தின் ஆயராகப் பொறுப்பேற்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2019, 13:56