அகுஸ்தீன் துறவு சபை பிரதிநிதிகள் சந்திப்பு அகுஸ்தீன் துறவு சபை பிரதிநிதிகள் சந்திப்பு 

அகுஸ்தீன் துறவு சபையினருக்கு திருத்தந்தை உரை

அகுஸ்தீன் சபையினர், குழும வாழ்வு வழியாக, திருஅவையின் காணக்கூடிய சாட்சியங்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா– வத்திக்கான்

துறவறக் குழுமங்களில், கடவுளை ஒன்றிணைந்து அனுபவிக்கும் வழியில், வாழ்வு அமைய வேண்டும், அதன் வழியாக, அவர் வாழ்கிறார் என்பதை உலகிற்கு உணர்த்த முடியும் என்று, அகுஸ்தீன் துறவு சபை பிரதிநிதிகளிடம், இவ்வெள்ளியன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில், புனித அகுஸ்தீன் துறவு சபையின் பொதுப் பேரவையில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 150 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளை குழுமமாக ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டியதை வலியுறுத்தினார்.

அகுஸ்தீன் சபையினர், குழும வாழ்வு வழியாக, திருஅவையின் காணக்கூடிய சாட்சியங்களாக வாழ்வதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அச்சபையின் கொள்கை நூலில் குறிக்கப்பட்டுள்ள, ‘பிறரன்பில் ஒற்றுமை’ என்பது, புனித அகுஸ்தீன் ஆன்மீகத்தின் மையமாக உள்ளது என்பதையும், திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

‘கடவுளில்’ என்ற சபையின் மையப் பண்பைவிட்டு, உடன்பிறப்பு உணர்வில் பிறரன்பைக் கடைப்பிடிக்க முடியாது என்றும், இச்சபையிலுள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் கடவுளைத் தேடுவதை, தங்களது புனித நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, கடவுளைத் தேடுதல், மற்ற நோக்கங்களால் மழுங்கடிக்கப்படக் கூடாது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2019, 15:35