மொரீஷியசில் திருத்தந்தை திருப்பலி மொரீஷியசில் திருத்தந்தை திருப்பலி 

திருத்தந்தையின் செப்டம்பர், அக்டோபர் மாத திருவழிபாடுகள்

அமேசான் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் துவக்கமாக, அக்டோபர் 6ம் தேதி ஞாயிறு காலை பத்து மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார்

மேரி தெரேசா– வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நிறைவேற்றும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, பாப்பிறையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான, பேரருள்திரு குய்தோ மரினி (Guido Marini) அவர்கள், செப்டம்பர் 14, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 29, பொதுக்காலம் 26ம் ஞாயிறு காலை 10.30 மணிக்கு, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் உலக நாளை முன்னிட்டு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவார்.

அக்டோபர் மறைபரப்பு மாதத்தைத் துவங்கி வைப்பதற்காக, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அக்டோபர் 1, செவ்வாயன்று, மாலை 6 மணிக்கு, மாலை திருப்புகழ்மாலை வழிபாட்டை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அக்டோபர் 4, வெள்ளி, மாலை 5 மணிக்கு, ஆயர் திருப்பொழிவு திருப்பலி, 5ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, புதிய கர்தினால்களுக்கு மோதிரம், தொப்பி வழங்கும் வழிபாடு, 6ம் தேதி ஞாயிறு காலை பத்து மணிக்கு, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தைத் துவங்கி வைக்கும் திருப்பலி ஆகியவற்றை திருத்தந்தை நிறைவேற்றுவார்.

அக்டோபர் 13, பொதுக்காலம் 27ம் ஞாயிறு, காலை 10.15 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், Giovanni Enrico Newman, Giuseppina Vannini, Maria Teresa Chiramel Mankidiyan, Dulce Lopes Pontes, Margarita Bays ஆகிய ஐந்து அருளாளர்களை, புனிதர்களாக அறிவிக்கும் திருப்பலியை நிறைவேற்றுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 20, பொதுக்காலம் 28ம் ஞாயிறு, காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், மறைபரப்பு ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 27, பொதுக்காலம் 29ம் ஞாயிறு, காலை 10 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், அமேசான் பற்றிய உலக ஆயர்கள் சிறப்பு மாமன்றத்தின் இறுதி நிகழ்வாக, திருப்பலி நிறைவேற்றுவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2019, 15:30