பெந்தக்கோஸ்து தூய ஆவியார் பெந்தக்கோஸ்து தூய ஆவியார் 

திருத்தந்தையின் தலைமையில் பெந்தக்கோஸ்து பெருவிழா திருவிழிப்பு

ஜூன் 08, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், பெந்தக்கோஸ்து பெருவிழா திருவிழிப்பு திருவழிபாடு நடைபெறும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

வியப்புகளுடன் வாழும் விசுவாச வாழ்வு, சுவையாக அமையும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன்,04, இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

விசுவாச வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு தன் டுவிட்டர் செய்தியில் இச்செவ்வாயன்று எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “வியப்பின்றி விசுவாசம் இருந்தால், மந்தமான மற்றும் வாடிக்கையான வாழ்வு போன்று, அதுவும் அமைந்துவிடும்” என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்.

பெந்தக்கோஸ்து திருவிழிப்பு

மேலும், ஜூன் 9. வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் பெந்தக்கோஸ்து பெருவிழாவை முன்னிட்டு, ஜூன் 08, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருவிழிப்பு திருவழிபாடு நடைபெறும்.

உரோம் மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள இந்த செப வழிபாட்டின் இறுதியில், உரோம் திவினோ அமோரே இறையன்பு அன்னை மரியா திருவுருவப்படம் பவனியாக எடுத்துச் செல்லப்படும். பின்னர், அந்தப்படம், அன்று இரவு, திவினோ அமோரே திருத்தலத்திற்கு நடைபெறும் மெழுகுதிரி பவனியில் எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழிப்பு திருவழிபாடு பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள, உரோம் மறைமாவட்ட திருத்தந்தையின் பிரதிநிதி, கர்தினால் ஆஞ்சலோ தெ தொனாதிஸ் அவர்கள், அனைவரும் இணைந்து ஆண்டவரைப் புகழ்வதற்கு, இது ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டு, எல்லாரும் இதில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2019, 14:43