ருமேனிய மக்களிடமிருந்து விடைபெறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் ருமேனிய மக்களிடமிருந்து விடைபெறுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

ருமேனிய திருத்தூதுப்பணம் நிறைவுற்றது

இயேசுவைச் சந்திக்கவும், அவருக்குச் சேவையாற்றவும், அவரின் சாட்சிகளாக ஏனையோருக்கு விளங்கவும் உதவக்கூடிய கண்களையும், இதயத்தையும், நாம் கொண்டிருக்க....

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ருமேனியா நாட்டில் தன் மூன்று நாள் திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து, ஜூன் 2, இஞ்ஞாயிறு மாலை, உரோம் நகர் திரும்பினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களை பெரும்பான்மையினராகக் கொண்ட ருமேனியா நாட்டில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு குழுக்களைச் சந்தித்து, உரையாற்றித் திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறு மாலை, இத்தாலிய நேரம், 6.10 மணிக்கு உரோம் நகரின் சம்பினோ விமான நிலையம் வந்தடைந்தார்.

ஒவ்வொரு திருப்பயணத்தையும் நிறைவுச் செய்து திரும்பும் வழியில் மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயம் சென்று  அன்னை மரியாவுக்கு நன்றியுரைப்பதை வழக்கமாக கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்முறையும் அவ்வாறே சென்று, சிறிது நேரம் செபித்தபின், வத்திக்கான் திரும்பினார்.

மேலும், இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'இயேசு வானகத்திற்கு எழும்பிச் சென்றது, இயேசுவின் புது வடிவான பிரசன்னத்தை நம்மிடையே துவக்கி வைக்கிறது. அது மட்டுமல்ல, அவரைச் சந்திக்கவும், அவருக்குச் சேவையாற்றவும், அவரின் சாட்சிகளாக ஏனையோருக்கு விளங்கவும் உதவக்கூடிய கண்களையும் இதயத்தையும் நாம் கொண்டிருக்க வேண்டும் என இயேசு நம்மிடம் கேட்கிறார்' என்ற சொற்களைப் பதிவு செய்துள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2019, 16:22