திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்  

இயேசுவால் மீட்கப்பட்ட ஒவ்வொருவரின் பணி

நம் வாழ்வு சாட்சியம் வழியாகவும், பிறருக்குப் பணிபுரிவதன் வழியாகவும் இயேசுவை இவ்வுலகிற்கு வழங்குவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தொழில் நுட்பத்திலும், அறிவியல் வளர்ச்சியிலும் தன் முழு நம்பிக்கையைக் கொண்டு, மீட்புக்கு மனிதரின் வல்லமையே போதும் என்று நம்பும் இன்றைய உலகில், தூய ஆவியாரால் புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறித்து நடைபெறும் இத்தாலிய தேசிய கருத்தரங்கு முக்கியத்துவம் நிறைந்தது என்ற செய்தியொன்றை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

"இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்று இயேசு கூறிய சொற்களை மையக்கருத்தாகக் கொண்டு, இத்தாலியின் ரிமினியில் இவ்வெள்ளி முதல், ஞாயிறு முடிய இடம்பெற்றுவரும் மூன்று நாள் கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரால் கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இயேசுவால் மீட்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை, பணியில் அர்ப்பணிக்கவேண்டும் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தி வலியுறுத்துகிறது.

மீட்பின் நற்செய்தியை பரப்பவும், அறிவிக்கவும் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது என்பதை எடுத்துரைக்கும் இச்செய்தி, நம் வாழ்வு சாட்சியம் வழியாகவும், பிறருக்குப் பணிபுரிவதன் வழியாகவும் இயேசுவை இவ்வுலகிற்கு வழங்குமாறு விண்ணப்பித்துள்ளது.

தூய ஆவியாரால் புதுப்பித்தல் என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இத்தாலியின் 42வது தேசிய கருத்தரங்கில், ஏறத்தாழ, 15,000 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2019, 17:03