ஏழை கிளாரா ஆழ்நிலை தியான சகோதரிகள் சந்திப்பு
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
மத்திய இத்தாலியில், ஸ்பெல்லோ நகரில், ஏழை கிளாரா ஆழ்நிலை தியான சகோதரிகள் வாழ்கின்ற, Vallegloria துறவு இல்லத்திற்கு, சனவரி 11, இவ்வெள்ளி மாலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென சென்று, அந்த இல்லத்திலுள்ள அருள்சகோதரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஸ்பெல்லோ நகருக்கு, உரோம் நகரிலிருந்து ஏறத்தாழ இரண்டு மணி நேரம் காரில் சென்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Foligno மறைமாவட்ட ஆயர் Gualtiero Sigismondi அவர்களுடன் திருப்பலி நிறைவேற்றி, அருள்கோதரிகளுடன் உணவருந்தி, சிறிதுநேரம் உரையாடிக்கொண்டிருந்த பின்னர், வத்திக்கான் திரும்பினார்.
இச்சந்திப்பு பற்றி அறிவித்த, Foligno மறைமாவட்டம், எதிர்பாராத நேரத்தில் அந்த துறவு இல்லத்தின் கதவின்முன் திருத்தந்தை அவர்களைப் பார்த்ததும், அந்த அருள்சகோதரிகள் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர் என்று கூறியுள்ளது.
ஸ்பெல்லோ ஆழ்நிலை தியான சகோதரிகளின் இறையழைத்தல், அவர்களின் தனிவரம் போன்றவை குறித்து திருத்தந்தை ஆர்வமாய்க் கேட்டு, வியந்து பாராட்டினார் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆழ்நிலை தியான அருள்சகோதரிகளுக்கென, “Vultum Dei quaerere”என்ற திருத்தூது கொள்கைத்திரட்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு ஜூலையில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்