நைஜிரியாவில் நிகழும் கடத்தல் குறித்து அந்நாட்டு ஆயர்பேரவை கவலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2006-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு மார்ச் வரை நைஜீரியாவில் 53 அருள்பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர், 12 பேர் தாக்கப்பட்டும் 16 பேர் கொல்லப்பட்டும் உள்ளனர் என்றும், பதினேழு ஆண்டுகளில், நைஜீரியாவில் 81 அருள்பணியாளர்கள் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நைஜீரியாவின் ஆயர் பேரவையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்க நாட்டில் அருள்பணியாளர்களின் கடத்தல் மற்றும் கொலைகள் குறித்து நைஜீரியாவின் ஆயர்பேரவை Fides செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய அறிக்கையில் இந்தத் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நைஜீரியாவில் அருள்பணியாளர்கள் மற்றும் மதம் சார்ந்தவர்களைக் கடத்துவது என்பது நீண்ட காலமாக அறியப்பட்டு வரும் செய்தியாக உள்ளது என்றும், இதில் வெளிநாட்டவர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பாரம்பரிய ஆட்சியாளர்கள், மற்றும், பள்ளிக் குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் அடங்குவர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது அந்நாட்டு ஆயர் பேரவை
வடக்கு நைஜீரியா என்பது நீண்ட காலமாகப் பயங்கரவாத குழுக்களுடன் இணைக்கப்பட்ட பகுதியாகும் என்றும், இது Boko Haram என்ற பயங்கரவாத அமைப்பையும் அதிலிருந்துதோன்றிய பிற கிளை அமைப்புக்குகளையும் உள்ளடக்கியது என்றும், அவற்றில் முக்கியமானது மேற்கு ஆப்பிரிக்க மாநிலத்தில் செயல்பட்டு வரும் ISWAP என்ற இஸ்லாமிய அரசாகும் இன்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அண்மைய ஆண்டுகளில், இந்தக் கடத்தல் நிகழ்வு நைஜீரியாவின் தெற்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளது என்றும், அங்குக் கடத்தல் என்ற இந்தத் துயர நிகழ்வு பிரிவினைவாத அமைப்புகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளது அந்நாட்டு ஆயர்பேரவை (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்