இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். - தானியேல் 12: 2 இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர். - தானியேல் 12: 2 

பொதுக்காலம் 33ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 33ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

சென்ற ஆண்டின் துவக்கத்தில், கோவிட்-19 பெருந்தொற்றின் முதல் அலை, உலகெங்கும் பரவியபோது, அறிவியல், அரசியல் தளங்களில், பல கேள்விகள் எழுப்பப்பட்டன, விளக்கங்களும் தரப்பட்டன. அதேபோல், மதங்களும், இந்த பெருந்தொற்றைக் குறித்து, கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் தந்தன.

அண்மைய ஆண்டுகளில், கட்டுக்கடங்காத காட்டுத்தீ, புயல், வெள்ளம், நிலநடுக்கம் ஆகிய இயற்கைப் பேரிடர்களால், நமது பூமிக்கோளமும், மனித சமுதாயமும் ஏற்கனவே காயமடைந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் அலைகள், ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் தாக்கியபோது, 'இதுதான் உலக முடிவா?' என்ற கேள்வி, அடிக்கடி கேட்கப்பட்டது.

உலக முடிவைப் பற்றிய கேள்விகளும், வதந்திகளும், வரலாற்றில் பலமுறை வலம் வந்துள்ளன. குறிப்பாக, நாம், 2000மாம் ஆண்டை நெருங்கிய வேளையில், இவ்வகை வதந்திகள், பல குழப்பங்களை உருவாக்கின என்பதை அறிவோம். இந்தக் குழப்பங்களை மூலதனமாக்கி, வர்த்தகர்களும், ஏன், ஒரு சில மதப் போதகர்களும், இலாபம் தேடினர் என்பதையும், நாம் வேதனையுடன் அறிந்துகொண்டோம்.

எருசலேம் நகரில், இயேசுவின் விண்ணேற்ற குன்றுக்கருகே 'ஒலிவ மலை ஹோட்டல்' (Mount of Olives Hotel) என்ற விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியை நடத்தும் உரிமையாளர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் பல்லாயிரம் கிறிஸ்தவர்களுக்கு 1998ம் ஆண்டு ஒரு மடலை அனுப்பியிருந்தனர். அம்மடலில் கூறப்பட்ட விளம்பர வரிகள் இதோ: "2000மாம் ஆண்டு, இயேசுவின் 'இரண்டாம் வருகை' நிகழும்போது, ஒலிவ மலையில் நீங்கள் காத்திருக்க வேண்டாமா? எங்கள் ஹோட்டலில் ஓர் அறையை உங்களுக்காக ஒதுக்கி வைக்கிறோம். முன்பதிவு செய்துகொள்ளுங்கள்" என்று அம்மடலில் கூறப்பட்டிருந்தது.

வர்த்தக உலகினர் மேற்கொண்ட இத்தகைய முயற்சிகளைக் காணும்போது, ஒரு சில கேள்விகள் எழுகின்றன. உலகம் முடிந்தபின்னரும் தாங்கள் சேர்த்துவைக்கும் பணம் நீடிக்கும் என்று வர்த்தகர்கள் நினைத்தனரா? அல்லது, 'உலக முடிவு', 'இரண்டாம் வருகை' ஆகியவற்றை, கேலிப்பொருளாக மாற்றி, வேடிக்கை செய்தனரா என்பதில் தெளிவில்லை. ஒன்று மட்டும் நமக்கு மீண்டும், மீண்டும் தெளிவாகப் புரிகிறது. தங்களைச் சுற்றி நடப்பதையெல்லாம், அது, உலக முடிவே ஆனாலும் சரி, அவற்றை வைத்து, இலாபம் தேடுவதில், வர்த்தக உலகினர் தீவிரம் காட்டுகின்றனர் என்பது, வேதனை தரும் உண்மை.

உலக முடிவு என்ற உண்மை, நம்மில் எவ்வகை எண்ணங்களை எழுப்பவேண்டும், எவ்வகையான உறுதியைத் தரவேண்டும் என்பதைச் சிந்திக்க, இந்த ஞாயிறு நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இவ்வழைப்பு இன்று நம்மை வந்தடைவதற்குக் காரணம் உண்டு. கத்தோலிக்க வழிபாட்டில், ஒவ்வோர் ஆண்டையும், திருவருகைக் காலம், கிறிஸ்து பிறப்புக் காலம், தவக்காலம், உயிர்ப்புக் காலம், மற்றும், பொதுக்காலம் என்று, ஐந்து காலங்களாகப் பிரித்துள்ளோம். மே மாதத்தின் இறுதி நாள்களில் நாம் கொண்டாடிய தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைத் தொடர்ந்து, கடந்த 26 வாரங்களாக நாம் பயணித்துவந்த பொதுக்காலத்தின் இறுதியை நாம் நெருங்கியுள்ளோம். அடுத்த ஞாயிறு, கிறிஸ்து அரசர் திருநாள். அதைத் தொடர்ந்துவரும் திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன்று, திருவழிபாட்டின் புதிய ஆண்டைத் துவக்குகிறோம். வழிபாட்டு ஆண்டின் இறுதியில், இறுதிக் காலத்தைப்பற்றி சிந்திக்க, இன்றைய இறைவாக்கு நம்மை அழைக்கிறது.

இறுதிக் காலம், எப்போது, எவ்விதம் வரும் என்பது தெரியாது. ஆனால், அந்த இறுதிக் காலத்தைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும் என்பதே, இன்றைய வழிபாட்டின் வாசகங்கள் நமக்குத் தரும் அழைப்பு. இறுதிக் காலத்தைச் சந்திக்க எவ்விதம் தயார் செய்வது?

ஆங்கிலத்தில், ‘last minute preparation’ – ‘இறுதி நிமிட தயாரிப்பு’ என்ற ஒரு சொற்றொடர் உண்டு. நாம் அனைவரும் வாழ்க்கையில் இதுவரை சந்தித்த, இனியும் சந்திக்கவிருக்கும் ஓர் அனுபவம் இது. நாம் எழுதப்போகும் தேர்வுக்காக, பல நாட்களாக நாம் தயார் செய்தாலும், கடைசி நேரத்தில், தேர்வு எழுதும் அரங்கத்தின் வாசலில் நின்றபடி, எத்தனை முறை, ‘இறுதி நிமிட தயாரிப்பு’கள் செய்துள்ளோம்! வீட்டில் நிகழும் வைபவங்களுக்கு, பல நாட்கள் தயாரித்தாலும், வைபவத்திற்கு முந்திய இரவு, அரக்க, பரக்க, ஓடியாடி, வேலைகள் செய்கிறோம். அதேபோல், வேலையில் சேர்வதற்குமுன் நடத்தப்படும் நேர்காணல், வீட்டுக்கு வரவிருக்கும் விருந்தினர்... என்று, ‘இறுதி நிமிட தயாரிப்பு’க்கு பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். மேலே சொன்னவை அனைத்திலும், பொதுவாக மேலோங்கியிருக்கும் ஓர் உணர்வு, எதிர்பார்ப்பு.

நல்ல காரியங்களை எதிர்பார்க்கும்போது, ஆனந்தம், ஆர்வம் ஆகியவை நம்மைச் செயல்பட வைக்கும். ஆனால், நல்லவை அல்லாத சூழல்களை நாம் எதிர்பார்க்கும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? எடுத்துக்காட்டாக, நமக்கு மிக நெருங்கியவர்கள், மருத்துவமனையில், உடல்நலமின்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது, எவ்வித எதிர்பார்ப்பு இருக்கும்? அதை ‘எதிர்பார்ப்பு’ என்றுதான் சொல்லமுடியுமா? எதிர்பார்ப்பு, நல்லதோ, கெட்டதோ, அது எதிர்காலத்தோடு தொடர்புடையது...

எதிர்காலத்தைத் தெரிந்துகொள்வதற்கு எத்தனை வழிகளை நாம் பின்பற்றுகிறோம்! கைரேகையைப் பார்த்து, கிளிகள் எடுத்துத்தரும் அட்டைகளை வைத்து, நாள், கோள், நட்சத்திரங்களைப் பார்த்து... எத்தனை வழிகளில், எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்! எதிர்காலம் முழுவதும், "நல்ல காலம் பொறக்குது" என்ற சொற்களையே நாம் கேட்டுக்கொண்டிருந்தால், பரவாயில்லை. ஆனால், அந்த எதிர்காலத்தில் பிரச்சனைகள் மலைபோல் காத்துக்கிடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டால், ஏன் இதைத் தெரிந்துகொண்டோம் என்று வருத்தப்படுவோம்.

எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி - நம் ஒவ்வொருவரின் இறுதிநாள் பற்றியது. நாம் அனைவரும் மரணத்தை, ஒருநாள் சந்திக்க இருக்கிறோம். ஆனால், அதைப்பற்றி எண்ணவோ, பேசவோ தயங்குகிறோம். மரணத்தைப்பற்றி, மரித்தோரைப்பற்றி சிந்திக்க, திருஅவை, நமக்கு, நவம்பர் மாதத்தை வழங்கியுள்ளது. இந்த நவம்பர் மாதத்தின் ஒரு ஞாயிறன்று, நமது வாழ்வின் முடிவைப்பற்றி, இந்த உலகத்தின் முடிவைப்பற்றி சிந்திக்க நமக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக முடிவைப்பற்றி, குறிப்பாக, அந்த முடிவை, ஓர் அழிவாகக் காட்டும் பல திரைப்படங்கள் வந்துள்ளன. இனியும் வரும். இவற்றில் பெரும்பாலானவை, மக்களைக் கவர்ந்த வெற்றிப்படங்கள். இத்திரைப்படங்கள் ஏன் வெற்றி அடைந்தன என்பதை அலசிப்பார்த்தால், மனித இயல்பு பற்றிய ஓர் உண்மையை உணரலாம். அதுதான், அழிவைப் பார்ப்பதற்கு நமக்குள் உள்ள இனம்புரியாத ஆர்வம் என்ற உண்மை.

எடுத்துக்காட்டாக, சாலையில் விபத்து ஒன்று நடந்ததும், அங்கு கூடும் கூட்டத்தில், பலர், என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் அங்கு ஈர்க்கப்படுவர். இந்த அடிப்படை ஆர்வத்தை மூலதனமாக்கி, நமது தொடர்புசாதனங்கள், முக்கியமாக, திரைப்படங்கள், பல்வேறு கணணி வித்தைகளைப் பயன்படுத்தி, அழிவை, பிரம்மாண்டமாக, கவர்ச்சியாக காட்டுகின்றன.

தொலைக்காட்சி, சினிமா, பத்திரிகைகள் வழியே, அழிவை, அடிக்கடி பார்ப்பதும், அழிவை, பிரம்மாண்டமாய்ப் பார்ப்பதும் ஆபத்து. ஊடகங்களில் பார்க்கும் அழிவுக்கும், வாழ்க்கையில் சந்திக்கும் அழிவுக்கும், பல வேறுபாடுகள் உள்ளன. நிழல் படங்களில் அழிவைப் பார்த்து, பார்த்து பழகிவிட்டு, நிஜமாய் நடக்கும் அழிவுகளில், உயிர்கள் அழிக்கப்படுவதையோ, அல்லல்படுவதையோ, உணரமுடியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்த அழிவுகளைப்பற்றி அடிக்கடி பேசுவதும், கேட்பதும் மற்றுமோர் ஆபத்தை உண்டாக்கும். அழிவுகளை அடிக்கடி பார்க்கும்போது, மனதில் நம்பிக்கை வேர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் அறுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. நம்பிக்கை வேரறுக்கப்படும் போது, அவநம்பிக்கை விதைக்கப்படும், விரக்தி வேர்விட்டு வளர்ந்துவிடும். உலக முடிவையும், அழிவையும் கவர்ச்சிகரமாகக் காட்டும் ஊடகங்களாகட்டும், அல்லது இந்த முடிவுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்குச் சொல்லி பயமுறுத்தும் போலி மதத்தலைவர்களாகட்டும், அவர்களிடமிருந்து நாம் பெறும் உணர்வுகள், பெரும்பாலும், அவநம்பிக்கையும், விரக்தியுமே!

அழிவைப்பற்றி அடிக்கடி பேசி, அவநம்பிக்கை என்ற நோயைப் பரப்பிவரும் இவ்வுலகப் போக்கிற்கு ஒரு மாற்றுமருந்தாக, இறைவனின் இரக்கம், இறுதிக்காலம் வரை தொடரும் என்ற நம்பிக்கையை, நமக்குள் நாமே வளர்க்கவேண்டும். பிறரிடமும் இந்த நம்பிக்கையை வளர்க்க, நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்த நம்பிக்கையை வளர்க்கும் சொற்களை, இறைவாக்கினர் தானியேல் நூலில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.

தானியேல் 12: 1-3

அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்... ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.

இறுதியாக, ஓர் எண்ணம். நவம்பர் 14, இஞ்ஞாயிறன்று, உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம். 2016ம் ஆண்டு நிறைவுற்ற இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக வறியோர் நாளை, வழிபாட்டு ஆண்டின் ஒரு பகுதியாக உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பொதுக்காலம், 33ம் ஞாயிறை, உலக வறியோர் நாளாகச் சிறப்பிக்க திருத்தந்தை அழைப்புவிடுத்தார். அதன்படி, இவ்வாண்டு, ஐந்தாவது உலக வறியோர் நாளைச் சிறப்பிக்கிறோம்.

ஐந்தாவது உலக வறியோர் நாளுக்கென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறப்புச் செய்தியொன்றை, வெளியிட்டுள்ளார். "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்" (மாற்கு 14:7) என்ற தலைப்பில், திருத்தந்தை வழங்கியுள்ள இச்செய்தியின் மூன்றாம் பத்தியில் அவர் பகிர்ந்துகொண்டுள்ள எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

  • இயேசு ஏழைகள் பக்கம் சார்ந்திருக்கிறார். இது, அவரது சீடர்களுக்கு, காலம் காலமாய் சக்திமிக்கதொரு பாடமாக அமைகிறது. இதையே அவர், "ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்" என்ற சொற்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
  • ஏழைகள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள் என்ற உண்மை, அவர்கள் மீது அக்கறையற்றவர்களாக நம்மை ஆக்கலாம். அதற்குப்பதில், அவர்கள் மீது கூடுதல் அக்கறை கொண்டு, அவர்களோடு நம் வாழ்வைப் பகிர்வதற்கு, இந்த உண்மை நம்மை அழைக்கிறது.
  • ஏழைகள் நம் குழுமங்களுக்கு 'வெளியில்' இருப்பவர்கள் அல்ல. மாறாக, நம் வாழ்வைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கும் சகோதரர்கள், மற்றும் சகோதரிகள். நமது பகிர்வின் வழியே, அவர்களது துயரங்களைத் துடைப்பதுடன், அவர்களுக்குரிய மாண்பை நிலைநாட்டுவதும் முக்கியம்.
  • ஒருவருக்கு பிறரன்பு பணியாற்றும்போது, அங்கு, தருபவர், பெறுபவர் என்ற இரு பாகுபாடுகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், பகிர்வதன் வழியே, பாகுபாடற்ற, உடன்பிறந்த நிலை உருவாக்கப்படுகிறது.
  • தர்மம் செய்வது, அவ்வப்போது நிகழ்வது, ஆனால், பகிர்வது, தொடர்ந்து, நீடித்து நிகழ்வது.
  • தர்மம் தரும்போது, தருபவருக்கு, அது மனநிறைவை அளிக்கும். தர்மம் பெறுபவரோ, மிகத் தாழ்வாக உணரக்கூடும். ஆனால், பகிர்வதன் வழியே, தருபவர், பெறுபவர் இருவரும் சமநிலையில் ஒருங்கிணைக்கப்படுவர்.
  • எனவே, நம்பிக்கை கொண்டோர், இயேசுவை நேருக்கு நேர் சந்தித்து, அவரைத் தொட விரும்பினால், ஏழைகள் பக்கம் திரும்பவேண்டும். ஏழைகளே, கிறிஸ்துவின் அருளடையாளமாய் திகழ்கின்றனர்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 November 2021, 13:39