கத்தோலிக்க கைவினைப் பொருள் நிறுவனத்திற்கு விருது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன், பங்களாதேஷ் நாட்டில், சணல் கைவினைப் பொருட்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசுத்தலைவரின், தொழில் முன்னேற்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரத்திற்கு உதவுதல் என்ற அடிப்படையில், ஆறு பிரிவுகளின்கீழ், தொழில் அமைப்புகளுக்கு, கடந்தவாரத்தில் விருதுகள் வழங்கப்பட்ட வேளையில், காரித்தாஸ் உதவிபெறும் சணல் கைவினைப் பொருள் உற்பத்தி அமைப்பிற்கு, குடிசைத்தொழில் என்ற பிரிவின்கீழ், அரசுத்தலைவரின் விருது வழங்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டிலும், இதே விருதைப் பெற்றுள்ள இந்த CORR சணல் நிறுவனம், சணல் பைகள், கூடைகள், வாழ்த்து அட்டைகள், தோட்ட உபகரணங்கள், குடை தாங்கிகள், கிறிஸ்துமஸ் மரங்கள், இசைக்கருவிகள் போன்ற பல்வேறு பொருட்களைத் தயாரித்து, வேலை வாய்ப்பிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் உதவிவருகிறது.
1973ம் ஆண்டில் பங்களாதேஷ் விடுதலைப்போரின்போது, கணவர்களை இழந்த விதவைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தால், இதுவரை குறைந்தபட்சம் 5 இலட்சம் பேர் பயனடைத்துள்ளனர்.
தற்போது 7000 குடும்பங்களின் வருமானத்திற்கு காரணமாக இருக்கும் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 50 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்