புதைப்படிவ எரிபொருள்களை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்ளின் போராட்டம் புதைப்படிவ எரிபொருள்களை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்ளின் போராட்டம் 

மதத்தலைவர்களின் "புனித மக்கள், புனித இதயம் - அறிக்கை"

சுத்தமான சக்தி, வேலைவாய்ப்பு, பழங்குடியினரின் சுய ஆட்சி, குடிபெயர்ந்தோரின் வரவேற்பு, பல்லுயிர்களின் பராமரிப்பு, பூமியைச் சுரண்டும் வேளாண்மையிலிருந்து வெளியேறுதல் என்பவை உள்ளிட்ட பத்து பரிந்துரைகள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31 வருகிற ஞாயிறு முதல், நவம்பர் 12ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் COP26 காலநிலை மாற்ற உலக உச்சி மாநாட்டை முன்னிட்டு, உலகின் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மதத்தலைவர்கள், "புனித மக்கள், புனித இதயம் அறிக்கை" என்ற பெயரில் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் இவ்வுலகை பாதித்துவரும் காலநிலை சீரழிவுகளுக்கும், கடந்த ஈராண்டுகள் இவ்வுலகை வதைத்துவரும் கோவிட் பெருந்தொற்றுக்கும் தகுந்த முறையில் பதிலிறுக்க, உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என்று, இந்த விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ளது.

புதைப்படிவ எரிபொருள்களை சார்ந்திருப்பது, காடுகளை அழிப்பது, நீர் வளங்களை சீரழிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இன்றைய உலகின் பொருளாதார அமைப்பு, தன் காலத்தைக் கடந்துவிட்டது என்பதை உணர்ந்து, புதிய வழிகளில் சக்தியை உருவாக்குதல், அனைவருக்கும் சுத்தமான காற்றையும், நீரையும் உறுதி செய்தல் ஆகிய வழிகளில் தலைவர்கள் சிந்திக்கவேண்டும் என்று மதத்தலைவர்களின் அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

இன்றைய காலநிலை மாற்றத்தின் சீரழிவிற்கு, செல்வம் மிகுந்த நாடுகள் முக்கிய காரணம் என்பதை உணர்ந்து, பொறுப்புடன் செயலாற்றவும், இந்த சீரழிவினால் பாதிக்கப்பட்ட வறியோருக்கு சேரவேண்டிய நீதியை வழங்கவும், இந்த உச்சி மாநாடு முடிவுகள் எடுக்கவேண்டும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுத்தமான சக்தி, கருணை நிறைந்த நிதி, வேலைவாய்ப்பு, பழங்குடியினரின் சுய ஆட்சி, குடிபெயர்ந்தோரின் வரவேற்பு, சுற்றுச்சூழலின் மீட்சி, பல்லுயிர்களின் பராமரிப்பு, புதைபடிவ எரிசக்தியிலிருந்து வெளியேறுத்ல், பூமியைச் சுரண்டும்வண்ணம் நடைபெறும் வேளாண்மை முறைகளிலிருந்து வெளியேறுதல் என்பவை உள்ளிட்ட பத்து பரிந்துரைகளை, "புனித மக்கள், புனித இதயம் அறிக்கை" வெளியிட்டுள்ளது.

மேலும், அண்மையில், Laudato sì இயக்கம் என்று பெயர்மாற்றம் செய்திருக்கும் உலக கத்தோலிக்க காலநிலை இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், COP26 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வோருக்கு மற்றொரு விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.

"நலமான பூமிக்கோளம், நலமான மக்கள் வேண்டுகோள்" என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பம், பல்லுயிர் பராமரிப்பு, காற்று மாசுப்பாட்டைக் குறைத்தல், அடித்தள மக்களின் பங்கேற்பு, கூடுதலான விழிப்புணர்வு ஆகிய அம்சங்களை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2021, 14:08