கிழக்கு திமோர் திருஅவைப் பணிகள் கிழக்கு திமோர் திருஅவைப் பணிகள் 

கிழக்குத் திமோர் நாட்டின் முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகம்

கிழக்குத் திமோர் நாட்டில் கல்வித்தரத்தைப் பாதுகாப்பதில், திருஅவையின் கல்விப்பணிகள் உதவுகின்றன என பாராட்டும் அந்நாட்டு பிரதமர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கிழக்குத் திமோர் நாட்டில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றை திறப்பதற்கு தலத்திருஅவை முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், அந்நாட்டில், உயர்கல்வியின் தரத்தை கட்டிக்காப்பதில் இது பேருதவியாக இருக்கும் என அறிவித்துள்ளார், அந்நாட்டு பிரதமர்.

கிழக்குத் திமோர் பிரதமர் Taur Matan Ruak அவர்களை நேரில் சென்று பேராயர் Dom Virgilio do Carmo da Silva அவர்கள் சந்தித்த வேளையில், கல்வியின் தரத்தை பாதுகாப்பதில், திருஅவையின் கல்விப்பணிகள் உதவுகின்றன என பிரதமர் பாராட்டினார்.

கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கிழக்குத் திமோர் நாட்டில், முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தை திறக்கும் விண்ணப்பத்தை அரசிடம் ஒரு மாதத்திற்கு முன்னர் சமர்ப்பித்த தலத்திருஅவை, இவ்வாண்டிலேயே அதனைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார் தலைநகர் திலியின் பேராயர் da Silva.

12 இலட்சம் பேரைக் கொண்டுள்ள கிழக்குத் திமோர் நாட்டில், 10 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்ந்துவரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது, முன்னாள் ஆயர் Carlos Filipe Ximenes Belo அவர்களின் காலத்திலிருந்தே, கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகிறன.

ஏற்கனவே செயல்பட்டுவரும் கத்தோலிக்க கல்வி நிறுவனத்தை, பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்தும் அனுமதியை, கலாச்சார மற்றும் உயர்கல்வி அமைச்சகம் வழங்கியவுடன், இவ்வாண்டிலேயே தலத்திருஅவையின் பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும் என கிழக்குத் திமோரின் கத்தோலிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2021, 14:53