ஏழை நாடுகளுக்கு உதவும் அயர்லாந்து கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
அயர்லாந்து நாடு கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், ஏழை நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கென அந்நாட்டு மக்கள் வழங்கிவரும் நிதியின் அளவு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன் ஆண்டறிக்கையை ஆகஸ்ட் முதல் தேதி ஞாயிறன்று வெளியிட்ட Trócaire என்ற, அந்நாட்டின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, அண்மைக்காலங்களின் மிகவும் கடினமான இந்த காலக்கட்டத்தில், வெளிநாடுகளின் முன்னேற்றத் திட்டங்களுக்கென 7 கோடியே 30 இலட்சம் டாலர்களை மக்கள் வழங்கியுள்ளது, கடந்த மூன்றாண்டுகளில் இது பெரிய தொகை என தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், 25 ஏழை நாடுகளின் 27 இலட்சம் மக்களை நேரடியாகச் சென்று சந்தித்து உதவிகளை ஆற்றமுடிந்தது என கூறும் இந்த பிறரன்பு அமைப்பு, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மக்கள் வழங்கியுள்ளது 15 விழுக்காடு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.
பல்வேறு ஏழை நாடுகளில், குறிப்பாக ஆப்ரிக்க கண்டத்தில் ஏழ்மை அகற்றும் திட்டங்களில் பணியாற்றிவரும் Trócaire கத்தோலிக்க பிறரன்பு அமைப்பிற்கு, அயர்லாந்து அரசும் நிதியுதவிகளை வழங்கிவருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்