அமெரிக்க கத்தோலிக்கர், கிழக்கு ஐரோப்பிய திருஅவைகளுக்கு உதவி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
பல ஆண்டுகளாக எதிர்கொண்ட சமய அடக்குமுறைகளால் மீண்டுவரப் போராடும் 23 ஐரோப்பிய நாடுகளின் திருஅவைகளின், 208 நலத்திட்டங்களுக்கு உதவத் தீர்மானித்துள்ளது, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை.
அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கரின் தாராளப்பண்பால், துன்புறும் மத்திய, மற்றும், கிழக்கு ஐரோப்பிய திருஅவைகளுக்கு, 35 இலட்சத்து 60 ஆயிரம் டாலர்களை வழங்கவுள்ளதாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின், திருஅவைகளுக்கு உதவும் பணிக்குழு அறிவித்துள்ளது.
மத்திய, மற்றும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கத்தோலிக்கர், இருள்நிறைந்த காலக்கட்டங்களில், கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியுடன் இருந்து, அதே நம்பிக்கையை தங்களின் பிள்ளைகளுக்கும் வழங்கி வருகின்றனர் என்று, அப்பணிக்குழுவின் தலைவரான, Steubenville ஆயர் Jeffrey Monforton அவர்கள், ஆயர்களின் வலைபக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
மத்திய, மற்றும், கிழக்கு ஐரோப்பாவில், கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததற்குப்பின், அப்பகுதியின் பல நாடுகள், தங்களின் அரசியல், பொருளாதார, மற்றும், சமய வாழ்வை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கஷ்டப்பட்டு வருகின்றன என்றும், ஆயர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவை அனுப்பும் இந்நிதியுதவி, மத்திய, மற்றும், கிழக்கு ஐரோப்பாவின் 23 நாடுகளில், மேய்ப்புப்பணிக்கும், அவற்றில் 5 நாடுகளில் மனித வாழ்வுக்கு ஆதரவான திட்டங்களுக்கும் உதவும் என்றும், ஆயர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்