திருத்தந்தையின் பயணம், ஆன்மீகப் பலப்படுத்தலுக்கு பேருதவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்லோவாக்கியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சி நிறைந்த செய்தியாக உள்ளது என அறிவித்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Stanislav Zvolenský.
துன்புறுவோருக்கும், வறுமையில் வாடுவோருக்கும், தேவையில் இருப்போருக்கும், குடும்பங்களுக்கும், இளையோருக்கும் இந்த திருப்பயணம் குறித்த செய்தி, பெருமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது என்ற பேராயர் Zvolenský அவர்கள், இந்த நோக்கங்களுடன் இடம்பெற உள்ள திருத்தூதுப்பயணம், ஆன்மீகப் பலப்படுத்தலுக்கு பேருதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
செப்டம்பரில் இடம்பெற உள்ள திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்ட ஸ்லோவாக்கிய அரசுத்தலைவர் Zuzana Caputova அவர்கள், துயர்களை அனுபவித்துவரும் இன்றைய காலத்தில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், ஒப்புரவு மற்றும் நம்பிக்கையின் செய்தியைத் தாங்கிவருவதாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், ஸ்லோவாக்கியா நாட்டிற்கு ஒரு பெரிய கௌரவமாக உள்ளது என தெரிவித்தார், ஸ்லோவாக்கிய வெளியுறவு அமைச்சர் Ivan Korcok.
இவ்வாண்டு செப்டம்பர் 12 முதல் 15 வரை திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டிலும், ஸ்லோவாக்கியா நாட்டிலும் இடம்பெற உள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்