நேர்காணல்: PEAK நிறுவனமும் இலங்கை புலம்பெயர்ந்தோரும்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் சூன் 20ம் தேதி, உலக புலம்பெயர்ந்தோர் நாளைச் சிறப்பிக்கிறது. 1951ம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டதன், ஐம்பதாம் ஆண்டு நிறைவாக, 2001ம் ஆண்டில், ஐ.நா. பொது அவை உலக புலம்பெயர்ந்தோர் நாளை உருவாக்கியது. போர்கள், வன்முறை, அடக்குமுறை, இயற்கைப் பேரிடர்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தங்களின் சொந்த இடங்களைவிட்டு புலம்பெயரும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்த விழிப்புணர்வை உலகினர் மத்தியில் உருவாக்கவும், அம்மக்களுக்கு ஆதரவு வழங்கவும் இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது. 2019ம் ஆண்டின் இறுதியில், உலகில், 7 கோடியே 95 இலட்சம் பேர் புலம்பெயர்ந்திருந்தனர். இவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள், 2 கோடியே 60 இலட்சம் பேர். மேலும், நாடுகளுக்குள்ளே புலம்பெயர்ந்தவர்கள் 4 கோடியே 57 இலட்சம். கத்தோலிக்கத் திருஅவை, செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் நாளைச் சிறப்பிக்கின்றது. இன்று உலகில், ஐ.நா. அமைப்புகள் தவிர, திருஅவையின் பல்வேறு அமைப்புகளும், பல அரசு-சாரா அமைப்புகளும் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவி வருகின்றன. PEAK (People Education And Action In Kodaikanal Trust) எனப்படும் இயேசு சபையினரின் தொண்டு நிறுவனம், கொடைக்கானல் மலையில், தலித் மற்றும், பழங்குடி இன மக்களுக்கும், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கொடைக்கானல் மலையில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பணிகளை ஆற்றி வருகிறது. இலங்கை புலம்பெயர்ந்த மக்களுக்கு, PEAK நிறுவனம் ஆற்றிவரும் பணிகளை, அந்நிறுவனத்தின் இயக்குனர் இயேசு சபை அருள்பணி எஸ். ஆரோக்யசாமி அந்தோனி அவர்கள், பகிர்ந்துகொண்ட தகவல்களை இன்று வழங்குகிறோம்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்