என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? - திருப்பாடல் 22:1 என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? - திருப்பாடல் 22:1 

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 2

இயேசு, கல்வாரியில், அந்தத் துன்பத்தின் உச்சத்தில் சொன்ன ஏழு வாக்கியங்களில், மூன்று வாக்கியங்கள், திருப்பாடல்கள் நூலில் காணக்கிடக்கும் வாக்கியங்கள்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியத்தேடல்: திருப்பாடல்கள் நூல் - அறிமுகம் 2

திருப்பாடல்கள் நூலை மையப்படுத்தி, ஒரு புதிய விவிலியத்தேடல் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில், குழு செபங்களில், திருவழிபாடுகளில் பயன்படுத்தப்படும் திருப்பாடல்கள், விவிலியம் என்ற நூலிலும், நம் வாழ்விலும், மையமாக விளங்குகிறது என்ற எண்ணத்துடன் நம் தேடலை ஆரம்பித்திருக்கிறோம்.

திருப்பாடல்கள் நூல், பெரும் அறிவியல் தத்துவங்களையோ, வரலாற்றையோ கூறும் நூல் அல்ல; மாறாக, நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு அனுபவங்களை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்படும் இறைவேண்டல்கள், புகழுரைகள், வேதனை அறிக்கைகள் என்ற பல வாழ்வியல் எதார்த்தங்களை பதிவு செய்துள்ள ஒரு நூல் என்று சிந்தித்தோம்.

இந்நூலை, ஓர் அமுத சுரபியாக, வைரமாக, மூச்சுக்காற்றாக உருவகித்து, இந்நூலின் சில பயன்பாடுகளை, சென்ற விவிலியத் தேடலில் பகிர்ந்துகொண்டோம். இந்நூலின் பயன்பாடுகளைக் குறித்து இன்று தொடர்ந்து சிந்திப்போம்.

அருள்சகோதரிகள் தங்கியிருக்கும் ஓர் இல்லத்திற்கு தவக்காலத்தின்போது செல்லும் வாய்ப்பு பெற்றேன். அங்கிருந்த அருள்சகோதரிகள் ஓர் அழகிய பழக்கத்தைப் பின்பற்றுவதைக் கண்டேன். தவக்காலத்தின் ஒவ்வொரு நாளும், அவர்கள், காலை செபங்களையும், திருப்பலியையும் முடித்து, காலை உணவிற்கு வரும்போது, அவர்கள் சிற்றாலயத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியிலிருந்து, ஒவ்வொருவரும் ஒரு சிறு துண்டு அட்டையை எடுத்ததைக் கண்டேன். திருப்பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியங்கள், அந்த துண்டு அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன. அதில் பதிவு செய்யப்பட்டிருந்த திருப்பாடல் வரிகளை, அவர்களது அன்றைய தியானங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றில் பின்பற்ற முயற்சி செய்வதாக அவர்கள் கூறினர். இதையொத்த பல்வேறு பழக்கங்கள், பல்வேறு வடிவங்களில், தனி மனிதராலும், குடும்பங்களாலும் பின்பற்றப்படுவதை நாம் அறிவோம்.

திருப்பாடல்களை, எவ்விதம் பயன்படுத்தலாம் என்பதைக் குறித்து, புதிய ஏற்பாட்டின் ஒரு சில நூல்களில் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில், மூன்று கூற்றுகளை இப்போது கேட்போம்:

  • எபேசியருக்கு எழுதிய திருமுகம் 5:19
  • உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள்.
  • கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:16
  • முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
  • யாக்கோபு எழுதிய திருமுகம் 5:13
  • உங்களுள் யாரேனும் துன்புற்றால், இறைவேண்டல் செய்யட்டும்: மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.

நாம் கேட்ட இந்தக் கூற்றுகளில் திருப்பாடல்களை எவ்வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை திருத்தூதர்கள் பவுலும், யாக்கோபும் நமக்கு உணர்த்தியுள்ளனர்.        

  • நாம் மேற்கொள்ளும் உரையாடல்களில், திருப்பாடல்கள் இடம் பெறட்டும்.
  • கற்பிப்பதில், அறிவுரைக் கூறுவதில், திருப்பாடல்கள் இடம் பெறட்டும்.
  • நமது மகிழ்ச்சியில், திருப்பாடல்கள் இடம் பெறட்டும்.
  • நமது துன்பத்தில், உடல்நலக் குறைவில், திருப்பாடல்கள் இடம்பெறட்டும்.

இவ்வாறு, ஏறத்தாழ, வாழ்வின் பல சூழ்நிலைகளிலும் திருப்பாடல்களைப் பயன்படுத்தச் சொல்லி திருத்தூதர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களது கூற்றை, சிறிது கற்பனை கலந்து சிந்திப்போம். நாம் வழக்கமாக, ஒருவர், ஒருவரைச் சந்திக்கும்போது, "Good Morning", "வணக்கம்" என்று வாழ்த்துகிறோம். ஒரு சிலர், இவ்வாறு வாழ்த்துவதற்குப் பதில், "Praise the Lord" அல்லது, "இயேசுவுக்கேப் புகழ்" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அதேபோல், நம் வாழ்த்துக்களில், "ஆண்டவரே, என் ஒளி" (தி.பா. 27:1), "ஆண்டவரில் களிகூருங்கள்" (தி.பா. 33:1) "ஆண்டவர் மாண்புமிக்கவர்" (தி.பா. 48:1)  என்ற திருப்பாடல்களின் வரிகளை சொல்லலாம், இல்லையா? தாராளமாகச் சொல்லலாம். ஆனால், அது இயல்பாக, நம் உள்ளங்களிலிருந்து வெளிவரவேண்டும். இல்லையேல், மிகச் செயற்கையாகத் தெரியும். இப்படி இயல்பாகச் சொல்லும் பக்குவம்பெறுவதற்கு, திருப்பாடல்கள், நம் வாழ்வில் இன்னும் அதிகம் ஊறிப்போக வேண்டும். இதைத்தான், சென்ற வாரம் நாம், திருப்பாடல்களை, மூச்சுக்காற்றுடன் ஒப்பிட்டுப் பேசினோம். இந்தப் பக்குவத்தை இயேசு பெற்றிருந்தார்.

திருப்பாடல்களை எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்பதற்கு, இயேசுவே ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறார். பள்ளிக்குச் சென்று பல நூல்களை இயேசு படித்தாரா என்பதெல்லாம் நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால், திருப்பாடல்களை, அவர், தன் வாழ்வில், அடிக்கடி பயன்படுத்தியிருக்க வேண்டும்; ஏறக்குறைய அனைத்துத் திருப்பாடல்களும் அவரது நினைவில் பதிந்திருக்கவேண்டும். இப்படி நாம் எண்ணிப்பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம், கல்வாரிக் காட்சி.

வாழ்வில், சில வேளைகளில், நாம், உள்ளத்தில், உடலில் அடிபடும்போது, நாம் வாய்விட்டுச் சொல்லும் முதல் வார்த்தைகளைச் சிந்திக்கலாம். நம்மில் பலர், அவ்வேளைகளில், 'அம்மா' என்றோ, 'கடவுளே' என்றோ, 'இயேசுவே' என்றோ வாய்விட்டுச் சொல்கிறோம். தீர ஆராய்ந்து முடிவெடுத்துச் சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல இவை. எவ்வித சிந்தனையும் இன்றி, எதேச்சையாக, இயல்பாக வெளிவரும் சொற்கள் இவை. ஏன் இதைச் சொன்னோம் என்று யாராவது கேட்டால், விளக்கங்களை நம்மால் சொல்லமுடியாது. அவ்வளவு தூரம் நமக்குள் ஊறிப்போனச் சொற்கள் இவை.

இயேசு, கல்வாரியில், அந்தத் துன்பத்தின் உச்சத்தில் சொன்ன ஏழு வாக்கியங்களில், மூன்று வாக்கியங்கள், திருப்பாடல்கள் நூலில் காணக்கிடக்கும் வாக்கியங்கள். இயேசுவின் உள்ளத்தை, வாழ்வை, திருப்பாடல்கள் நூலின் வரிகள் எப்போதும் நிறைத்திருந்ததால், அவரிடமிருந்து, அச்சொற்கள், இயல்பாகவே வெளிவந்தன. அவர் சொன்ன அந்த மூன்று வாக்கியங்களையும், அவற்றிற்கு ஈடான திருப்பாடல்களின் வரிகளையும் இப்போது ஒரு சேரக் கேட்போம்:

  • மத்தேயு நற்செய்தி 27:46 (காண். மாற்கு நற்செய்தி 15:34)
  • மூன்று மணியளவில் இயேசு, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.
  • திருப்பாடல் 22:1
  • என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?

 

  • யோவான் நற்செய்தி 19:28
  • இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.
  • திருப்பாடல் 69:3, 21
  • கத்திக் கத்திக் களைத்துப்போனேன்: தொண்டையும் வறண்டுபோயிற்று... என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

 

  • லூக்கா நற்செய்தி 23:46
  • “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார்.
  • திருப்பாடல் 31:1, 5
  • ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்... உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்.

சிலுவையில் அறையப்பட்ட நிலையில், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரணப்போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு, திருப்பாடல்களின் வரிகளைச் சொன்னார் என்பதும், தன் இறுதி மூச்சை விடும்போது, திருப்பாடல்களின் வரிகளோடு தம் வாழ்வை இயேசு முடித்தார் என்பதும், நம் அனைவருக்கும் நல்லதொரு பாடம்.

இயேசுவின் வாழ்விலோ, திருத்தூதர்கள் பவுல், யாக்கோபு ஆகியோரின் வாழ்விலோ திருப்பாடல்களின் வரிகள் இவ்வளவு ஆழமாய்ப் பதிய ஒரு முக்கிய காரணம்... இந்நூல், ஒரு கவிதைத் தொகுப்பு என்பதே.

கவிதைகளுக்கு தனி சக்தி உண்டு. நம் எண்ணங்களை, மனங்களை எளிதில் நிறைக்கும் சக்தி படைத்தவை கவிதைகள். தூங்கும் குழந்தை ஒன்றை எழுப்பி, Twinkle twinkle என்ற பாடலை நாம் ஆரம்பித்து வைத்தால், "Twinkle, twinkle little star, how I wonder what you are..." என்று முதல் இரு வரிகளையாவது அந்தக் குழந்தை சொல்லிவிட்டு மீண்டும் உறங்கிவிடும். Twinkle twinkle என்ற பாடல், உலக மகாக் கவிதை அல்ல. ஆனால், பல கோடி மக்களின் மனங்களில் இன்னும் இந்த வரிகள் இடம் பிடித்திருக்க ஒரு காரணம் அது ஒரு குழந்தைக் கவிதை.

நாம், பாலர் பள்ளியிலிருந்து, உயர்நிலைப் பள்ளி, அல்லது, கல்லூரி வரை படித்தவற்றில், இப்போதும், நம் நினைவில், வரிவரியாய் இடம் பிடித்திருப்பவை, கவிதைகளும், செய்யுள்களும் தாம். நாம் படித்த, அல்லது, மனப்பாடம் செய்த பல கட்டுரைகள், இவ்வளவு தூரம் வரி வரியாய் நினைவிருக்குமா என்பது, சந்தேகம் தான்.

“அகர முதல எழுத்தெல்லாம்” என்று யாராவது ஆரம்பித்துக் கொடுத்தால், நம்மில் பலர் முதல் பத்து குறள்களையும், ஏன்? அதற்கு மேலும் கூறும் திறமை கொண்டவர்கள் என்று நமக்குத் தெரியும். செய்யுள்கள், கவிதைகள், பாடல்கள் ஆகியவை மனதில் பதியும் ஆற்றல் கொண்டவை.

கவிதைகளுக்கு எப்படி இந்த சக்தி வருகிறது? கவிதை வரிகளில் இடம்பெறும் சந்தங்கள், அவற்றில் சொல்லப்பட்டுள்ள கற்பனைகள் இவற்றாலேயே கவிதைகளுக்கு இந்த சக்தி உண்டாகிறது. இத்தகைய ஒரு கவிதைத் தொகுப்புதான் திருப்பாடல்கள் நூல். இந்த நூலில் உள்ள கவிதை நயத்தை, அதுவும் எபிரேயக் கவிதைகளின் தனிச்சிறப்பை, நாம், அடுத்த விவிலியத்தேடலில் சிந்திப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 January 2021, 13:12