கையில் விளக்கு, மற்றும், எண்ணெயுடன் கையில் விளக்கு, மற்றும், எண்ணெயுடன் 

பொதுக்காலம் 32ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவற்றை மறந்துவிட்டால், வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும்.
ஞாயிறு சிந்தனை - 081120

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

"கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம். வீடு கட்டும்போது, அடித்தளம் முதல், கூரை முடிய வைக்கப்படும் ஒவ்வொரு கல்லையும், திட்டமிட்டுப் பொருத்துவதுபோல், கல்யாணத்தின் ஒவ்வொரு சிறு விடயத்தையும், பார்த்துப் பார்த்து செய்யவேண்டியுள்ளது. எவ்வளவுதான் கவனம் எடுத்து செய்தாலும், திருமணங்களில், அங்கொன்றும், இங்கொன்றுமாக, குறைகளும், குழப்பங்களும் எழுவதுண்டு.

திருமணம் என்ற நிகழ்வைச் சுற்றி, பல சடங்குகள் நடைபெறும். பெண் வீட்டாருக்கென ஒதுக்கப்பட்ட சடங்குகள், மாப்பிள்ளை வீட்டாருக்கென ஒதுக்கப்பட்டச் சடங்குகள் என்று நடத்தப்படுவதால், ஒவ்வொரு சடங்கும் முடியும்வரை, அந்தந்த வீட்டார், முள்ளின்மீது நடப்பதுபோன்ற உணர்வுடன் செயல்படுவர். பொதுவாக, பல திருமணங்களில், உணவுவேளையில் எழும் பிரச்சனைகள், பூகம்பங்களாக வெடிப்பதையும் பார்த்திருக்கிறோம். பல நாட்டுக் கலாச்சாரங்களில், திருமணத்தின் ஒரு முக்கியச் சடங்காகத் திகழ்வது, மாப்பிள்ளை அழைப்பு. அந்த மாப்பிள்ளை அழைப்பையும், அங்கு எழுந்த ஒரு பிரச்சனையையும் மையப்படுத்தி, இயேசு கூறிய ஓர் உவமை, (மத்தேயு நற்செய்தி 25: 1-13) இன்றைய நற்செய்தியாக தரப்பட்டுள்ளது.

“மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்” (மத்தேயு 25: 1) என்று தன் கதையை ஆரம்பிக்கும் இயேசு, உடனடியாக, அந்த பத்துத் தோழியரில், ஐந்து பேர் அறிவிலிகள், மற்ற ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், என்ற முக்கிய வேறுபாட்டையும் உணர்த்துகிறார். இவ்விரு குழுவினரும் நடந்துகொண்ட விதமே, உவமையின் கருவாக அமைந்துள்ளது. இவ்விரு குழுவினரும் தங்களை எவ்விதம் தயாரித்திருப்பர் என்பதை, சிறிது கற்பனை கலந்து சிந்திப்போம்.

முதலில், அறிவிலிகள் நடந்துகொண்ட விதத்தை அலசுவோம். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், அறிவிலிகள் ஐவரும் தலைகால் புரியாத மகிழ்ச்சி அடைந்திருப்பர். தாங்கள் என்னென்ன செய்யவேண்டும் என்ற பட்டியல் ஒன்றை, அவர்கள் தயார் செய்திருப்பர். தாங்கள் அணிந்து செல்லவேண்டிய உடைகள், நகைகள், அவற்றிற்குப் பொருத்தமாக வாங்கவேண்டிய காலணிகள் என்று, தங்கள் வெளித்தோற்றத்தை மெருகூட்டும் ஒரு பட்டியலைத் தயார் செய்திருப்பர். அவர்கள் எண்ணத்தில் எழுதப்பட்ட அப்பட்டியலில், ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. அதுதான்... விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய்!

அறிவிலிகள் தயார் செய்த இப்பட்டியலுக்கு முற்றிலும் மாறாக,  முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் 'விளக்கு எரிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்' என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.

இந்த உவமையை இன்னும் சிறிது ஆழமாக அலசுகையில், மற்றோர் அம்சமும் தெளிவாகிறது. மணமகன் வருவதற்கு காலம் தாழ்த்தப்பட்டது என்று உவமையில் சொல்லப்பட்டுள்ளது. அந்த நேரத்திலாவது இந்த ஐந்து பெண்களின் எண்ணங்கள், அவசியத் தேவையான எண்ணெய் பக்கம் திரும்பியிருந்தால், தவறை இவர்கள் சரி செய்திருக்கலாம். காத்திருந்த நேரத்திலும், அறிவிலிகளின் மனதில், அந்த காலத் தாமதத்தால் தங்கள் ஒப்பனை சிறிது, சிறிதாக கலைந்து வருவதைக் குறித்து அவர்கள் கவலைகொண்டதால், அவசியமான எண்ணெயை இவர்களால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. அந்தக் கவனக்குறைவால், அவர்கள் பங்கேற்க வந்திருந்த திருமண விழாவையே இழக்க வேண்டியிருந்தது.

தகுந்த தயாரிப்புக்கள் இன்றி, அல்லது, தவறான தயாரிப்புக்களுடன் திருமண விழாவில் பங்கேற்க வந்திருந்த ஐந்து பெண்களை, குறைசொல்வதற்கு நாம் ஆர்வமாக இருந்தால், சிறிது நேரம், நம்மைப்பற்றியும் சிந்திப்போம். ஒவ்வொரு முறையும் திருப்பலியில் கலந்துகொள்ள செல்லும் நாம், இறைவன் தரும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, தகுந்த தயாரிப்புக்களுடன் பங்கேற்கிறோமா என்பதை ஆய்வு செய்வது நல்லது.

நாம் திருப்பலிக்குச் செல்லும்போது, குறிப்பாக, மிக முக்கியமான திருப்பலிகளுக்குச் செல்லும்போது, எவ்வித எண்ணங்களுடன், தயாரிப்புக்களுடன் செல்கிறோம்? திருமுழுக்கு, புதுநன்மை, அருள்பணியாளர் திருப்பொழிவு, துறவியரின் வார்த்தைப்பாடு என்ற முக்கியமானத் திருப்பலிகளில், இன்னும் குறிப்பாக, திருமணத் திருப்பலிகளில், பீடத்தைச் சூழ்ந்திருக்கும் 'காமெராக்கள்' பெறும் முக்கியத்துவத்தை நாம் பார்த்திருக்கிறோம்.

திருத்தந்தையோ, ஆயர்களோ முன்னின்று நடத்தும் திருப்பலியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால், நம் மனதை ஆக்கிரமிக்கும் தயாரிப்புக்கள் எவை? திருப்பலி துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்று, கோவிலில், அல்லது, திருப்பலி நடைபெறும் வளாகத்தில் நல்லதொரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பது நம் முதல் எண்ணம். நல்லதொரு இடம் என்றால், திருத்தந்தையையோ, ஆயரையோ, அருகில், மிக அருகில், காணக்கூடிய ஓரிடம் என்பதே பொருள். அவ்விடத்தில் இருந்தால், நல்ல புகைப்படங்கள், அல்லது, வீடியோ எடுக்கமுடியும் என்று கணக்கிடுகிறோம்.

முக்கியமான, அல்லது, மிக முக்கியமான இத்திருப்பலிகள், நம் மனங்களில் பதிகின்றனவா என்பதைவிட, நம் 'காமிராக்களில்' பதிகின்றனவா என்பதில் நம் கவனம் அதிகம் செல்கிறது. இத்தகைய கவனம், திருப்பலியில் பங்கேற்கும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, கூட்டுத் திருப்பலியை இணைந்து ஒப்புக்கொடுக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்களிடமும் உள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில ஆண்டுகளுக்குமுன், மக்களிடம் கூறினார். தன் புதன் மறைக்கல்வி உரை ஒன்றில், திருப்பலியைப்பற்றி பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உள்ளத்தில் ஆழப்பதிந்த ஒரு வருத்தத்தை மக்களிடம் இவ்வாறு வெளிப்படுத்தினார்:

"திருப்பலியை முன்னின்று நடத்தும் அருள்பணியாளர், 'இதயங்களை மேலே எழுப்புங்கள்' என்று சொல்கிறார். 'போட்டோ எடுப்பதற்காக செல்போன்களை மேலே உயர்த்துங்கள்' என்று அவர் சொல்வதில்லை. புனித பேதுரு வளாகத்திலோ, அல்லது, பசிலிக்காவிலோ நான் திருப்பலியைக் கொண்டாடும் வேளையில், பல செல்போன்கள் உயர்த்தப்பட்டிருப்பதைக் காணும்போது, எனக்கு வேதனையாக உள்ளது. விசுவாசிகள் மட்டுமல்ல, அருள்பணியாளர்களும், ஆயர்களும் இவ்வாறு செய்வது எனக்கு வேதனையைத் தருகிறது. உங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்! திருப்பலி ஒரு கேளிக்கை காட்சி அல்ல! திருப்பலி நேரத்தில், செல்போன்கள் வேண்டாம்!" என்று திருத்தந்தை கூறினார்.

அவசியமற்றவைகளில் அதிக கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவற்றை மறந்துவிட்டால், வாழ்வில் முக்கியமானவற்றை, அல்லது, வாழ்வையே இழக்க வேண்டியிருக்கும். இதற்கு, 1988ம் ஆண்டு வெளிவந்த ஒரு செய்தி, நல்லதோர் எடுத்துக்காட்டு. இது ஓர் எச்சரிக்கையும் கூட.

வீடியோப் படங்கள் எடுப்பதில் சிறந்த Ivan Lester McGuire என்ற 35 வயது கலைஞரின் மரணம் பற்றிய செய்தி 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதி வெளியானது. பறக்கும் விமானத்திலிருந்து ஒரு குழுவாகக் குதித்து, கரங்களைக் கோர்த்து, வானில் சாகசங்கள் புரிவோரைப் பற்றிய செய்தி இது. Sky Diving என்று அழைக்கப்படும் இந்த சாகசத்தில் ஈடுபடும் இவர்கள், பறக்கும் விமானத்திலிருந்து ஒவ்வோருவராகக் குதிப்பார்கள். விண்வெளியில், ஒரு சங்கிலித்தொடராக கரங்களைப் பற்றியபடி அந்தரத்தில் இக்குழுவினர் பல வடிவங்களை அமைத்துக் காட்டுவார்கள். பின்னர், பூமியை நெருங்கும் வேளையில், தங்கள் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு விசையைத் தட்டுவார்கள். உடனே, அவர்களுடன் இணைக்கப்பட்ட ஒரு 'பாரச்சூட்' விரியும். அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்குவர். இந்த சாகசங்களைப் பதிவு செய்வதற்கு வீடியோ படக்கலைஞர் ஒருவரும் இக்குழுவுடன் விமானத்திலிருந்து குதிப்பார். 1988ம் ஆண்டு நடந்த இச்சாகசத்தின்போது, பறந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிப்பது காண்பிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒரு வட்டம் அமைப்பது வரை ஒழுங்காகக் காட்டப்பட்ட அந்த வீடியோ படம், திடீரென புரண்டு, தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் திரையில் ஒன்றும் இல்லை.

நடந்தது இதுதான். வீரர்கள் குதிப்பதை விமானத்திலிருந்தபடியே படம் பிடித்த வீடியோ கலைஞர் McGuire அவர்கள், இறுதியாக தானும் விமானத்திலிருந்து குதித்தார். வீடியோ எடுப்பதிலேயே கவனமாய் இருந்த அவர், தான் 'பாரச்சூட்' அணியவில்லை என்பதை உணராமல் குதித்துவிட்டார். வானில் நடைபெறும் இந்த சாகசகங்களை 800 முறைகளுக்கும் மேல் வீடியோ படம் எடுத்து புகழ்பெற்றவர் Ivan Lester McGuire. அன்று 'பாரச்சூட்' இல்லாமல் குதித்ததால், தன் வாழ்வை இழந்தார்.

பல வேளைகளில் தேவை என்று நாம் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருப்பவை தேவையற்றவையாகவும், தேவையற்றதென ஒதுக்குவது தேவையுள்ளதாகவும் மாறும் விந்தையும் நம் வாழ்வில் நடக்கும். முக்கியமாக, மரணம் நமக்கு முன் அமர்ந்திருக்கும்போது, நமது உண்மையான தேவைகள் என்னென்ன என்பதைப்பற்றி நாம் அனைவருமே ஞான உதயம் பெறுவோம்.

உலகத்தில் எதுவும் தன்னை மூழ்கடிக்க முடியாது என்ற இறுமாப்புடன் புறப்பட்ட பிரம்மாண்டமான ‘டைட்டானிக்’ (Titanic) கப்பல், தன் முதல் பயணத்திலேயே பனிப் பாறையில் மோதி மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் பலர், கோடீஸ்வரர்கள். மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி, அவர்கள் பெற்ற ஞான உதயங்களைப்பற்றி கதைகள் பல சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளில் இதுவும் ஒன்று.

மூழ்கும் கப்பலில் இருந்து மக்களைக் காப்பாற்ற உயிர்காக்கும் படகுகளில் பயணிகள் ஏற்றப்பட்டனர். அவர்களில் ஒரு பெண், படகில் ஏறியபின், எதையோ எடுத்து வருவதற்காக, தனது அறைக்கு மீண்டும் ஓடிச்சென்றார். அவருக்கு மூன்று நிமிடங்களே வழங்கப்படும் என்ற எச்சரிக்கை வழங்கப்பட்டது. அவர் மிக வேகமாக தன் அறையை நோக்கி, இடுப்பளவு நீரில் சென்றார். கப்பலில், அவர் தங்கியிருந்த அறையில், திறந்திருந்த பீரோவில், அவரது வைர நகைகள் மின்னின. ஆனால், இவை எதுவும் அவர் கவனத்தை ஈர்க்கவில்லை. அவர் கவனம் எல்லாம் ஒரு சிறு அட்டைப் பெட்டியில் இருந்த ஒரு சில ஆரஞ்சு பழங்கள் மீது சென்றது. அவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அவர் மீண்டும் அந்த உயிர்காக்கும் படகில் ஏறினார்.

ஓரிரு மணி நேரங்களுக்குமுன், கப்பல், நல்லமுறையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தன் வைரநகைகளைவிட, ஆரஞ்சு பழங்களே அவசியமானவை, என்று அவர் சொல்லியிருந்தால், அவரைப் 'பைத்தியம்' என்று மற்றவர்கள் முத்திரை குத்தியிருப்பார்கள். ஆனால், கப்பல் மூழ்கும் வேளையில், அக்கப்பலுக்குள் மரணம் நுழைந்துவிட்டது என்பதை உணர்ந்த வேளையில், வாழ்வின் அவசியங்கள் என்று அவர்கள் எண்ணி வந்த பட்டியலில் பல எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்தன.

நம் வாழ்க்கைப் பயணத்தில் கடந்த பத்து மாதங்கள் நுழைந்துவிட்ட மரணக் கிருமி, கோவிட்-19, நம் வாழ்வில் தேவையானவை எவை என்பதையும், தேவையற்றவை எவை என்பதையும், தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். இந்தக் கொள்ளைநோய்க்குப்பின் நாம் வாழப்போகும் வாழ்வு, நீதி, சமத்துவம், பரிவு, உடன்பிறந்த உணர்வு ஆகிய முக்கியத் தேவைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, இறைவன் நமக்கு உள்ளொளியையும், அந்த உள்ளொளியின்படி நடக்க, தேவையான பரந்த, உறுதியான மனதையும் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.

“தற்போது நான் அதிகம் 'பிசி'யாக இருக்கிறேன். பல முக்கியமான அலுவல்கள் உள்ளன. அவசியமானவை, அவசியமற்றவை, என்ற பாகுபாடுகளைச் சிந்திக்க, எனக்கு நேரமும் இல்லை, மன நிலையும் இல்லை. வாழ்வின் இறுதி காலத்தில், மரணம் நெருங்கும் வேளையில், இந்த வேறுபாடுகளையெல்லாம் சிந்தித்துக் கொள்ளலாம்” என்று நமக்கு நாமே சொல்லிக்கொண்டால், இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் நம்மைக் காப்பாற்றவேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.” (மத்தேயு 25: 13)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 November 2020, 14:42