கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. - மாற்கு 13:33 கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள். ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. - மாற்கு 13:33 

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் இரண்டாம் முறை வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

நவம்பர் 25, 26 ஆகிய நாள்களில், தமிழகமும், புதுச்சேரியும், ‘நிவர்’ (Nivar) புயலின் தாக்கத்தை உணர்ந்தன. இந்தப் புயலைக்குறித்து வானிலை ஆய்வுகளும், ஊடகங்களும் கூறிய, பெரும் அழிவுகளை உருவாக்காமல் இது கடந்துசென்றதற்காக, இறைவனுக்கு நன்றி சொல்வோம். அதேபோல், மூன்று ஆண்டுகளுக்கு முன், 2017ம் ஆண்டு, நவம்பர் 26, ஞாயிறு, தமிழ் நாட்டின் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக, நாகப்பட்டினத்தில் சுனாமி வரக்கூடும் என்ற வதந்தி வலம் வந்தது. கடவுளின் கருணையால், அந்த வதந்தி உண்மையாகவில்லை. பலருடைய மனங்களில், 26 என்ற தேதி, 2004ம் ஆண்டு, டிசம்பர் 26ம் தேதியை நினைவுக்குக் கொணர்ந்திருக்கக்கூடும். அன்று, கிறிஸ்மஸ் முடிந்து அடுத்தநாள், ஞாயிறு, திருக்குடும்பத் திருநாளன்று, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா மற்றும் பல ஆசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிப் பேரலைகள், அழிவுகளைக் கொணர்ந்தன. பல இலட்சம் மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட ஒரு பேரழிவு அது.

இவ்வாறு, அவ்வப்போது, நம்மை வதைத்துவரும் இயற்கைப் பேரிடர்கள் போதாதென்று, 2020 ஆண்டு முழுவதும் உலகின் பல நாடுகளில், கோவிட்-19 கொள்ளைநோயின் பரவல், அலை அலையாக எழுந்து, ஆயிரமாயிரம் உயிர்களைப் பலிவாங்கியவண்ணம் உள்ளது. பலர், இந்தக் கொள்ளைநோயை, உலகமுடிவின் ஓர் அடையாளமாகக் கூறிவருகின்றனர்.

மனித வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், உலகம் முடியப்போகிறது என்ற செய்தி அடிக்கடி பேசப்பட்டுள்ளது. கி.பி.204ம் ஆண்டு Hippolytus என்ற கிறிஸ்தவ எழுத்தாளர், அப்போது வாழ்ந்த ஆயர் ஒருவரைப் பற்றி எழுதியுள்ளார். உலகம் முடியப்போகிறது என்பதைத் தீவிரமாக நம்பிய அந்த ஆயர், தன் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை கொடுத்தார். அவர்களிடம் இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று, ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டு, அவருடன் பாலை நிலத்திற்கு வரும்படி அவர்களை அழைத்தார். அங்கு அவர்கள் இறைவனின் வரவுக்குக் காத்திருக்கலாம் என்று சொன்னார்.

கி.பி.999ம் ஆண்டின் இறுதி நாட்களில் உலகம் முடியப்போகிறது என்று எண்ணிய பல்லாயிரம் கிறிஸ்தவர்கள், உரோம் நகரில், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடி, அழுகையோடும், அச்சத்தோடும், உலகமுடிவை எதிர்பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் உலகமுடிவு வந்துவிட்டது என்று தீர்மானித்த இரு குழுக்கள் வேதனையான முடிவுகள் எடுத்ததை செய்திகளில் வாசித்தோம். 1978ம் ஆண்டிலும், 1997ம் ஆண்டிலும் உலகமுடிவு வந்துவிட்டதென்று உணர்ந்த இரு குழுவினர், நஞ்சு அருந்தி தற்கொலை செய்துகொண்டனர் என்ற செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தன. 1999ம் ஆண்டு முடிந்து, 2000மாம் ஆண்டு துவங்கியபோது, இதே கலக்கம் மீண்டும் தலைதூக்கியது, நமக்கு நினைவிருக்கலாம்.

நகரங்களில், அவ்வப்போது, சாலையோரங்களில் யாராவது ஒருவர் நின்றுகொண்டு, போவோர் வருவோர் அனைவரிடமும் துண்டு பிரசுரங்களை அல்லது சிறு புத்தகங்களை இலவசமாக வழங்குவதை பார்த்திருக்கிறோம். அந்தப் பிரசுரங்களில் அடிக்கடி நாம் காணக்கூடிய ஒரு செய்தி: "ஆண்டவரின் நாள் அண்மித்துவிட்டது... விழித்தெழு" என்ற செய்தி. ஒவ்வொரு முறையும், உலகில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி, கொள்ளைநோய் போன்ற பேரிடர்கள் நிகழும்போது, உலகமுடிவைப் பற்றி அதிகம் பேசுகிறோம், சிந்திக்கிறோம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று, புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறோம். இறைமகனை, குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருப்பதெற்கென உருவாக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று, உலகின் முடிவில் இறைவன் இரண்டாம் முறை வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. - மாற்கு நற்செய்தி 13: 33-37

உலகமுடிவைப் பற்றி நம்மால் தீர்மானமாக ஒன்றும் சொல்லமுடியாது. நாளையே வரலாம்; அல்லது, நாலாயிரம் கோடி ஆண்டுகள் சென்று வரலாம். ஆனால், நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலகவாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பதும் நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவற்றைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்தால், பயன்பெறலாம். எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க, இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.

விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு. பொறுப்புடன் நடந்துகொள்வது என்பது, தலைவர் இருக்கும்போது நல்லபெயர் எடுக்கவேண்டும்; அவர் இல்லாதபோது எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்று நடிப்பது அல்ல. தலைவர் என்னை மதித்து ஒப்படைத்துள்ள பொறுப்பை, எல்லா நேரத்திலும் நானும் மதித்து நடந்து கொள்வதுதான், உண்மையான பொறுப்புணர்வு.

இத்தாலி நாட்டின் வடபகுதியில் அழகிய ஒரு மாளிகை இருந்தது. அதைச்சுற்றி அழகான ஒரு தோட்டமும் இருந்தது. சுற்றுலாப் பயணிகளை ஒவ்வொரு நாளும் கவர்ந்துவந்த அந்த மாளிகையையும், தோட்டத்தையும், வயதில் முதிர்ந்த ஒருவர் பராமரித்து வந்தார். ஒருநாள், சுற்றுலாப் பயணி ஒருவர், அந்த மேற்பார்வையாளரிடம், "இந்த மாளிகையின் உரிமையாளர் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன?" என்று கேட்டார். மேற்பார்வையாளர், "12 ஆண்டுகள் ஆகின்றன" என்று சொன்னார். "ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல, முதலாளி, எதுவும் கடிதமோ, வேறு தொடர்போ வைத்துள்ளாரா?" என்று கேட்டதற்கு, அவர், "இல்லை" என்று பதில் சொன்னார். "நீங்கள் இந்த மாளிகையையும், தோட்டத்தையும் சுத்தம் செய்வதைப் பார்க்கும்போது, உங்கள் முதலாளி ஏதோ நாளையே வரப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது" என்று சொன்ன அந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்து சிரித்தார் மேற்பார்வையாளர். பின்னர், "நாளை இல்லை நண்பரே, இன்றே அவர் வரக்கூடும்" என்று பதில் சொன்னார்.

12 ஆண்டுகளாய், ஒவ்வொரு நாளும் 'தலைவன் இன்றே வரக்கூடும்' என்ற எதிர்பார்ப்புடன் கடமைகளைச் செய்த இந்த மேற்பார்வையாளரைப் போல் நாம் செயலாற்றவேண்டும் என்பதையே இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்கிறார். தலைவன் வந்தாலும் சரி, வராவிடினும் சரி, தனக்கு தரப்பட்டுள்ள பணிகளை சரிவர செய்யவேண்டும் என்று எண்ணுவதற்கு, தனியொரு பக்குவம் பெறவேண்டும்.

20th Century Fox என்ற திரைப்பட நிறுவனம், 'விற்பனை செய்யும் திறமை பெற்றவர் ஒருவர் தேவை' என்று, ஒருமுறை விளம்பரம் வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த விளம்பரத்தைக் கண்டு, விண்ணப்பம் அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒரு பெண்மணி அனுப்பியிருந்த பதில், நிறுவனத்தினரின் கவனத்தை ஈர்த்தது. அந்த விண்ணப்பத்தில், ஒரு கடையின் முகவரியைக் குறிப்பிட்டு அப்பெண் எழுதியிருந்தது இதுதான்:

"நான் தற்போது இந்தக் கடையில் மேசை, நாற்காலிகள் விற்கும் பணி செய்து வருகிறேன். இந்தக் கடைக்கு நீங்கள் வந்தால் என்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இங்கிருக்கும் பணியாளர்களில் எனக்கு மட்டுமே தலைமுடி சிவந்த நிறத்தில் உள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி நீங்கள் கடைக்கு வந்து, நான் பணிசெய்யும் விதத்தைக் கவனிக்கலாம். நீங்கள் யாரென்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே உங்கள் நன்மதிப்பைப் பெறும் வகையில், நீங்கள் வரும் நேரம் மட்டும் நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவும் வாய்ப்பில்லை. நான் ஒவ்வொரு நாளும் விற்பனை செய்யும் திறமையையே நீங்கள் வரும் நாளிலும் நான் வெளிப்படுத்துவேன். அந்தத் திறமை உங்களுக்குப் பிடித்திருந்தால், எனக்கு உங்கள் நிறுவனத்தில் வாய்ப்பு கொடுங்கள்" என்று அந்தப் பெண் எழுதியிருந்தார். வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த 1,500 பேரில், அந்தப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை, சொல்லவும் வேண்டுமா?

பிறரது கவனம் நம்மீது இருக்கிறது என்பதை உணரும் நேரங்களில், நாம் நடந்துகொள்ளும் முறை வேறுபட்டிருக்கும். குழந்தைகளிடமும், மிகவும் வயதானவர்களிடமும் இத்தகைய வேறுபாடுகள் அதிகம் இருக்காது. அதேபோல், ஆன்மீகத்தில் மிகவும் ஆழ்ந்து தெளிந்தவர்களிடமும் இத்தகைய வேறுபாடுகள் வெளிப்படாது. யார் பார்த்தாலும், பார்க்காமல் போனாலும் சரி, அவர்கள் எந்த நேரத்திலும், ஒரே விதமான, உண்மையான ஈடுபாட்டுடன் ஒவ்வொரு நாள் செயல்களையும் செய்வர். சூழலுக்குத் தக்கதுபோல் வாழ்வை மாற்றாமல் வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஜான் வெஸ்லி என்பவர் 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மேதை. கிறிஸ்தவ வாழ்வு என்பது பொறுப்புடன் சரியான கணக்கை இறைவனிடம் ஒப்படைக்கும் வாழ்வு என்ற எண்ணத்தை இங்கிலாந்து மக்கள் மத்தியில் விதைத்தவர் இவர். “இன்று உங்கள் வாழ்வின் கடைசி நாள் என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அவரிடம் ஒருவர் கேட்டபோது, அவர் சொன்ன பதில் இதுதான்: "நான் மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் தேநீர் அருந்துவேன், 6 மணிக்கு, நோயுற்றிருக்கும் திருமதி பிரவுன் அவர்களை, மருத்துவமனையில் பார்க்கச் செல்வேன், 8 மணிக்கு, என் மாலை செபங்களைச் சொல்வேன், இரவு உணவுக்குப் பின், வழக்கம்போல் படுக்கச்செல்வேன்... விழித்தெழும்போது, என் இறைவன் முகத்தில் விழிப்பேன்" என்று சொன்னாராம்.

உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவற்றை நாம் எவ்வகையில் கண்ணோக்குகிறோம் என்பதை ஆய்வுசெய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமையவேண்டும் என்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

ஆங்கில மொழியில் நெடுங்கதைகள் எழுதுவோரில் புகழ்பெற்ற எழுத்தாளர், John Grisham அவர்கள். அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இவர் எழுதிய பல நெடுங்கதைகள் (The Firm, The Pelican Brief, The Rainmaker, A Time to Kill) திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன. புகழும், செல்வமும் நிறைந்துள்ள இவர், வாழ்வில் நீடித்து நிலைக்கும் உண்மைகளுக்கு, குறிப்பாக, கடவுள் மீது நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தான் கல்லூரியில், சட்டப்படிப்பு பயின்றுவந்த வேளையில், தன் நண்பர் ஒருவர் தனக்குச் சொல்லித்தந்த ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைப் பற்றி, அவர் வழங்கிய ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறியுள்ளார்:

கல்லூரியில் என்னுடன் பயின்ற நெருங்கிய நண்பர் ஒருவர், தன் 25வது வயதில் இறந்துபோனார். நாங்கள் கல்லூரியில் பயின்ற வேளையில், அவர் ஒருநாள் என்னைச் சந்திக்க விழைவதாகக் கூறினார். எனவே, அன்று, மதிய உணவு வேளையில் நாங்கள் சந்தித்தோம். அப்போது, அவர், திடீரென என்னிடம், தனக்கு புற்றுநோய் உள்ளதாகவும், இன்னும் சிலநாள்களே வாழப்போவதாகவும் கூறியதும், நான் அதிர்ச்சியடைந்தேன். சிறிது நேரம் சென்று, நான் அவரிடம், "மரணம் நெருங்கியுள்ளது என்பதை அறியும்போது, என்ன செய்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், எனக்குள் ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. அவர் சொன்னது இதுதான்: "அது உண்மையிலேயே எளிமையான ஒரு விடயம். மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்ததும், முதலில் கடவுளுடன் அனைத்தையம் சீராக்கவேண்டும். நீ யாரை அதிகம் நேசிக்கிறாயோ, அவர்களுடன் கூடுதலான நேரத்தைச் செலவழிக்கவேண்டும். மற்றவர்களுக்கு உரியவற்றை, திருப்பிக்கொடுக்கவேண்டும்" என்று கூறிய நண்பர், இறுதியாக, "உனக்கு ஒன்று தெரியுமா? உனக்கு இருப்பதெல்லாம் ஒரு சில நாள்களே என்ற எண்ணத்துடன் நீ ஒவ்வொரு நாளும் வாழ்வது, எவ்வளவோ மேலானது" என்று சொல்லிமுடித்தார். அவர் சொன்னதை, இன்றுவரை நான் மறக்காமல் வாழ்கிறேன்.

"உனக்கு இருப்பதெல்லாம் ஒரு சில நாள்களே என்ற எண்ணத்துடன் நீ ஒவ்வொரு நாளும் வாழ்வது, எவ்வளவோ மேலானது" என்று John Grisham அவர்களின் நண்பர் சொன்ன சொற்கள், நம் உள்ளங்களில் தொடர்ந்து எதிரொலிக்கவேண்டும் என்று இறைவனை மன்றாடுவோம்.

இயற்கைப் பேரிடர்கள், கொள்ளைநோய், அரசியல் தலைவர்களின் அத்துமீறிய அநீதிகள் என்ற அச்சுறுத்தும் சூழலில் நாம் திருவருகைக் காலத்தைத் துவக்குகிறோம். இன்றைய வழிபாட்டின் முதல் வாசகத்தில், "நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?" (எசாயா 64:1) என்று இறைவாக்கினர் எசாயா இறைவனிடம், வேண்டுவதுபோல், நாமும், இறைவனை, நம் நடுவே இறங்கிவருமாறு அழைப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 November 2020, 13:07