பிலிப்பீன்ஸ் நாட்டில் அடிப்படை உரிமைகள் கேட்டு போராட்டம் பிலிப்பீன்ஸ் நாட்டில் அடிப்படை உரிமைகள் கேட்டு போராட்டம் 

மரணதண்டனையை மீண்டும் கொணரும் முயற்சிக்கு எதிர்ப்பு

மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும் கொணர்வதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே அவர்கள் விடுத்துள்ள அழைப்பை, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்துள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான போதைப்பொருள் பயன்பாடு, மற்றும் சில குற்றங்களுக்கு, மரணதண்டனை விதிக்கும் சட்டத்தை மீண்டும் கொணர்வதற்கு, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தெர்த்தே (Rodrigo Duterte) அவர்கள் விடுத்துள்ள அழைப்பை, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் சிறை மேய்ப்புப்பணிக்குழுவின் தலைவர் ஆயர் Joey Baylon அவர்கள், மரணதண்டனை உட்பட, எந்த ஒரு தண்டனையும், மனிதர்களை நல்வழிப்படுத்தியதில்லை என்பதை, வரலாறு நமக்குச் சொல்லித்தந்துள்ளது என்று கூறினார்.

மனிதர்களுக்கு அடிப்படையான மதிப்பை வழங்குவதற்கும், அவர்கள் மனம்மாறி, நல்வழியைத் தொடர வாய்ப்பளிப்பதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்று ஆயர் Baylon அவர்கள், அழைப்பு விடுத்தார்.

ஜூலை 27ம் தேதி பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் மக்களுக்கு வழங்கிய தொலைக்காட்சி உரையில், மரணதண்டனையை மீண்டும் கொணர்வதுபற்றி பேசியது குறித்து, மரணதண்டனைக்கு எதிரான கூட்டணி என்ற அமைப்பின் தலைவர் அருள்பணி Silvino Borres அவர்கள் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டதன் 14ம் ஆண்டு நிறைவையொட்டி தன் கருத்துக்களை வெளியிட்ட அருள்பணி Borres அவர்கள், வாழ்வின் அடித்தளமாக விளங்கும் கடவுளுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவே மரணதண்டனை என்று கூறினார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2020, 14:04