கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ  WCC கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ WCC 

கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ கிறிஸ்தவ சபைகள்

கொரியாவில் அமைதி மற்றும் ஒப்புரவு நிலவ, இணையதளம் வழியாக வெளியிடப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைதிச் செய்தியை, WCC, NCCK ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் தவிர, கொரியப் போரில் பங்கெடுத்த நாடுகளின் பிரதிநிதிகளும் வாசிப்பார்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கி எழுபது ஆண்டுகள் நிறைவுறும் இவ்வாண்டில், WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும், NCCK எனப்படும் கொரிய தேசிய கிறிஸ்தவ சபைகள் அவையும் இணைந்து, அமைதிக்காக அழைப்பு விடுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளன.

அமைதிக்கு கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி என்ற தலைப்பில், ஜூன் 22, வருகிற திங்களன்று, இணையதளத்தில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஒப்புரவை உருவாக்குவதற்கு முயற்சித்துவரும் கிறிஸ்தவ சபைகள், கொரியாவில் அமைதி நிலவ, உலக அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.

"நாம் செபிக்கின்றோம், இப்போதே அமைதி, போரை நிறுத்துக!" என்ற இலக்குடன், கொரிய தீபகற்பத்திற்காக, உலக அளவில், மார்ச் முதல் தேதியிலிருந்து ஆகஸ்ட் 15ம் தேதி வரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சீனா மற்றும், முன்னாள் சோவியத் யூனியனின் ஆதரவு பெற்ற வட கொரியாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாடு உட்பட, ஐ.நா. அவையின் ஆதரவு பெற்ற தென் கொரியாவுக்கும் இடையே, 1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியிலிருந்து, 1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வரை, கொரியப் போர் நடைபெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2020, 14:52