கோவிட்-19 சூழலில் பிரேசிலில்  ஓர் ஆலயம் கோவிட்-19 சூழலில் பிரேசிலில் ஓர் ஆலயம் 

திருத்தந்தையின் உதவிக்கு பிரேசில் தலத்திருஅவை நன்றி

Nova Iguaçu மறைமாவட்டம், பரப்பளவில் பெரியது. அதேநேரம், அதிக அளவில், சமுதாய மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகளைக் கொண்டது - ஆயர் Andrade

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கருமியால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

திருத்தந்தை வழங்கியுள்ள உதவிக்கு நன்றி தெரிவித்துள்ள, பிரேசில் நாட்டின் Nova Iguaçu ஆயர் Gilson Andrade அவர்கள், நாட்டில் பலருக்கு, ஒருமைப்பாட்டுணர்வே மிகுந்த நம்பிக்கையின் பாதையாக இருக்கும்வேளை, இந்த கொள்ளைநோய் காலத்தில், திருத்தந்தையின் விலைமதிப்பற்ற உதவி குறித்து, மக்கள் மிகுந்த மகிழ்வடைகின்றனர் என்று கூறியுள்ளார்.

பிரேசில் நாட்டில் கோவிட்-19 கொள்ளைநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Rio de Janeiro மாநிலத்தின் Baixada Fluminense பகுதி, ஏற்கனவே வறுமை, வன்முறை, மற்றும், அரசு அதிகாரிகளால் கைவிடப்பட்ட நிலைகளை அனுபவித்து வருகின்றது என்றுரைத்த ஆயர் Andrade அவர்கள், இந்நாள்களில் திருத்தந்தையின் ஒருமைப்பாட்டுணர்வை அதிகம் உணர முடிகின்றது என்று கூறினார். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் நாட்டு திருப்பீட தூதர் வழியாக, பத்தாயிரம் பிரேசில் நாட்டு பணத்தை, Nova Iguaçu மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை வழங்கியுள்ள இந்த உதவியைக்கொண்டு, மக்களுக்கு மிகவும் தேவைப்படும் உணவுப்பொருள்கள்  மற்றும், நலவாழ்வு தொடர்புடைய பொருள்கள் வாங்கப்படும் என்று ஆயர் அரிவித்துள்ளார்.

13 நகராட்சிகளைக்கொண்ட Baixada Fluminense பகுதியில், நான்கு மறைமாவட்டங்கள் உள்ளன என்றும், Nova Iguaçu மறைமாவட்டம், பரப்பளவில் பெரியதாகவும், அதேநேரம், அதிக அளவில், சமுதாய மற்றும், பொருளாதாரப் பிரச்சனைகளைக் கொண்டதாகவும் உள்ளது என்றும், ஆயர் Andrade அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2020, 15:09