கொரோனா தொற்றுநோய் காலத்தில் பிரேசில் பழங்குடியினர் கொரோனா தொற்றுநோய் காலத்தில் பிரேசில் பழங்குடியினர்  

பிரேசிலில் 11 திட்டங்களை வகுத்து உதவ உள்ள அமைப்பு

கொள்ளைநோய் பாதிப்புக் காலத்தில், ஏழை மக்களுக்கு உணவு உதவிகளை வழங்கிவந்த அருள்பணியாளர்கள், பொதுநிலை திருஅவைப் பணியாளர்கள் வழியாக புதிய திட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

உலகில் கோவிட்-19 தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கும் பிரேசில் நாட்டில், 11 புதிய திட்டங்களை வகுத்து உதவ உள்ளது, Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

கொள்ளை நோய் பாதிப்புக் காலத்தில், ஏழை மக்களுக்கு உணவு உதவிகளையும் ஏனைய அடிப்படை உதவிகளையும் வழங்கி வந்த அருள்பணியாளர்கள், பொதுநிலை திருஅவைப் பணியாளர்கள் வழியாக, இந்த திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக ACN அமைப்பு அறிவித்துள்ளது.

பிரேசில் நாட்டிற்குள்ளேயே திரட்டப்பட்ட அனைத்து உதவிகளும் தீர்ந்துவரும் நிலை உருவாகியிருப்பதால், இவ்வமைப்பினர், அந்நாட்டில், தங்கள் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அவசரகால உதவியாக ACN கத்தோலிக்க அமைப்பு அறிவித்துள்ள இந்த 11 புதிய திட்டங்கள், இந்நோயால் பல்வேறு வகைகளில் துன்புறும் ஏழை மக்களை கரையேற்றுவதை நோக்கமாகக் கொண்டவை.

7 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டில், இதுவரை 37 ஆயிரத்து 312 பேர், இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது. (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2020, 13:24