இஸ்பெயின் கலங்கரை விளக்கம் இஸ்பெயின் கலங்கரை விளக்கம் 

கோவிட்-19 நெருக்கடியில் கருணையின் கலங்கரை விளக்கங்கள்

கிறிஸ்தவ சபைகள் எதுவாக இருந்தாலும், அவை மறைப்பணியாற்றும் இடங்களில், கடும் ஏழ்மைநிலையில் உள்ள மக்களுக்கு ஆற்றும் பணிகளில், மற்ற மதத்தினர் மற்றும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்து செயல்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நெருக்கடிநிலையில், துன்புறும் மக்கள் மற்றும், குழுமங்களோடு தோழமையுணர்வுடன் பயணித்து, அவர்கள் வாழ்வில் நம்பிக்கை மற்றும், கருணையை ஊக்குவிக்கும் உண்மையான கலங்கரை விளக்கங்களாக, ஆசியத் திருஅவைகள் விளங்கி வருகின்றன என்று, பீதேஸ் செய்தி கூறுகின்றது.

ஆசிய கிறிஸ்தவ சபைகள் அவை (CCA)  நடத்திய இணையதள கருத்தரங்கு பற்றி  பீதேஸ் செய்தியிடம் கூறிய, ஆசிய கத்தோலிக்க ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின்  (FABC) உதவி பொதுச்செயலர் அருள்பணி William La Rousse அவர்கள், இந்த கொள்ளைநோய் காலத்தில், கடவுள் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கை, மற்றும் மனவலிமை போன்றவை, துன்புறும் மக்களுக்கு உதவ முடிகின்றது என்று கூறினார்.

தற்போதைய கொள்ளைநோய், சமுதாய சமத்துவமின்மைகளையும், அரசியல், மற்றும், பொருளாதார அமைப்பின் தரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது என்று கூறிய அருள்பணி La Rousse அவர்கள், ஆசியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவைகள், தேசிய மற்றும், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து, துன்புறும் மக்களுக்கு உதவி வருகின்றன என்றும், இணையதளம் வழியாக, செபங்கள் மற்றும், வழிபாடுகளை நடத்தி வருகின்றன என்றும் கூறினார்.

மேலும், இந்த கருத்தரங்கு குறித்து கருத்து தெரிவித்த, ஆசிய கிறிஸ்தவ சபைகள் அவையின் பொதுச் செயலர் Mathews George Chunakara அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய், இந்த உலகிற்கு, வலிமையான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என்றும், இப்போதைய உலகில் திருஅவையின் பங்கு என்ன என்பது பற்றி மறுஆய்வு செய்யவேண்டியது முக்கியம் என்றும் கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் எதுவாக இருந்தாலும், அவை மறைப்பணியாற்றும் இடங்களில், சமுதாயத்தில் கடும் ஏழ்மைநிலையில் உள்ள மக்களுக்கு ஆற்றும் பணிகளில், மற்ற மதத்தினர் மற்றும், பொதுநல அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும், மக்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும் வேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றன என்று, இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிநிலையால் உருவாகியுள்ள சவால்கள் மற்றும், ஏனைய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு, ஆசிய கத்தோலிக்கத் திருஅவைகள் உட்பட, ஆசியாவிலுள்ள முக்கிய கிறிஸ்தவ சபைகள் இணைந்து, இணையதளம் வழியாக கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2020, 14:22