கர்தினால் மால்கம் இரஞ்சித் கர்தினால் மால்கம் இரஞ்சித் 

தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக 2 நிமிட மௌனம்

இலங்கையில், கடந்த ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஓராண்டு நினைவாக இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும், கோவிட்-19 ஊரடங்கு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கடந்த ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் நினைவாக, நாட்டினர் அனைவரும் இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்குமாறும், அந்நேரத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்களும்,  மணிகளை ஒலிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக, ஏப்ரல் 21, வருகிற செவ்வாய் இலங்கை நேரம் காலை 8.40 மணிக்கு, நாட்டின் அனைத்து ஆலயங்களும், கோவில்களும் மணிகளை ஒலிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் இரஞ்சித்.

மேலும், அன்றைய நாள் காலை 8.45 மணிக்கு, இரண்டு நிமிடம் மௌனம் அனுசரிக்கவும், காலை 8.47 மணிக்கு, ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் விளக்கு அல்லது, மெழுகுதரிகளை ஏற்றவும், உயிரிழந்தவர்களின் நினைவாக மத சடங்குகளை ஆற்றவும், கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.  

கொழும்புவில், ஏப்ரல் 16, இவ்வியாழனன்று, செய்தியாளர் கூட்டத்தில் இவற்றை விளக்கிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், 2019ம் ஆண்டு உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் ஓராண்டு நினைவாக இடம்பெறவிருந்த அனைத்து நிகழ்வுகளும், கோவிட்-19 ஊரடங்கு நடவடிக்கையால் நிறுத்தப்பட்டுள்ளன என்று எடுத்துரைத்தார்.

2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி உயிர்ப்புப் பெருவிழாவன்று காலையில், கொழும்புவில் இரு கத்தோலிக்க ஆலயங்கள், மட்டக்களப்பில் ஒரு இவாஞ்சலிக்கல் ஆலயம் மற்றும், மூன்று ஆடம்பர பயணியர் மாளிகைகளில், ஒன்பது  தற்கொலை குண்டுவெடிப்பு நபர்கள், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினர். இவற்றில், 37 வெளிநாட்டவர் உட்பட, குறைந்தது 279 பேர் உயிரிழந்தனர் மற்றும், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர். (UCAN

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2020, 13:57