மக்களின் துயர்களை குறைக்க, நாம் விருப்பமுடன் செயலாற்றவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகைத் தாக்கி வரும் கொரோனா தொற்று நோயிலிருந்து தன் பகுதி மக்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் 10 இலட்சம் டாலர் மதிப்புடைய அடிப்படைத் தேவைப்பொருட்களை வழங்கியுள்ளார் நைஜீரியா நாட்டு பேராயர்.
கோவிட்-19 நோயால் 1200க்கும் மேற்பட்டோர் நைஜீரியாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில், மிகவும் உதவித் தேவைப்படும் மக்களுக்கு 10 இலட்சம் டாலர்கள் மதிப்புடைய உணவு மற்றும் முகக்கவசங்களை வழங்கியுள்ளார் அபுஜா பேராயர் Ignatius Kaigama.
நைஜீரியாவிற்குள் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையே விலைக்கு வாங்கி வழங்கியுள்ளதன் வழியாக, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கும் உதவியுள்ளார் பேராயர்.
நம்மிடையே மிகவும் வறுமை நிலையில் இருக்கும் மக்களின் துயர்களை குறைக்கவும், நாம் விருப்பத்துடன் செயலாற்றவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ள பேராயர் Kaigama அவர்கள், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என அரசுக்கும் சிறப்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.
இத்துன்பகரமான வேளையில் நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலும், நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும், அன்பையும் கடவுள் மீது நம் உறுதிப்பாட்டையும் மேலும் வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளார் பேராயர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்