உக்ரைன் நாட்டின் கிரேக்க கத்தோலிக்க ஆலயம் உக்ரைன் நாட்டின் கிரேக்க கத்தோலிக்க ஆலயம் 

உக்ரைனில் கொடுமைகளைத் தொடரும் இரஷ்யர்கள்

உக்ரைன் நாடு ஊழல் நிறைந்த நாடு என்பதை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன, ஆனால், அந்நாட்டு மக்கள், ஒவ்வொருநாளும், இரஷ்ய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்டுவருவதை ஊடகங்கள் கூறுவதில்லை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கொரோனா தொற்றுக்கிருமியைப் பற்றிய செய்தியால், உலகில் மறக்கப்பட்டுள்ள வேறு பல செய்திகளில், உக்ரைன் மக்களின் துயரங்களும் ஒன்று என்று, அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

உக்ரைன் நாடு ஊழல் நிறைந்த நாடு என்பதை மட்டும் வெளிச்சமிட்டுக் காட்டுவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துகின்றன, ஆனால், அந்நாட்டு மக்கள் ஒவ்வொருநாளும் இரஷ்ய ஆக்கிரமிப்பால் கொல்லப்பட்டுவருவதை ஊடகங்கள் கூறுவதில்லை என்று, கிரேக்க கத்தோலிக்க ஆயர் ஸ்டெபான் சுஸ் (Stepan Sus) அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் நாட்டின் துயரங்கள் குறித்து அக்கறை கொண்டிருந்த உலகக் கிறிஸ்தவர்களின் கவனம், தற்போது கொரோனா தொற்றுக்கிருமியின் பக்கம் திரும்பியுள்ளதை, இந்நாட்டில் தங்கள் கொடுமைகளைத் தொடரும் இரஷ்யர்கள் தங்களுக்குச் சாதமாக மாற்றியுள்ளனர் என்றும், அவர்களது கொடுமைகள் தற்போது கூடுதலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்றும், ஆயர் சுஸ் அவர்கள் கூறினார்.

இரஷ்ய ஆக்கிரமிப்பால் துன்புறும் Crimea பகுதியிலிருந்து உக்ரைன் நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள 20 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோருக்கு கிரேக்க கத்தோலிக்கத் திருஅவை, உதவிகள் செய்துவருவது குறித்தும், ஆயர் சுஸ் அவர்கள் தன் பெட்டியில் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு துவங்கிய இரஷ்ய-உக்ரைன் மோதல்களின் காரணமாக, இதுவரை 14,000த்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2020, 15:14