போலி இறைவாக்கினர்கள் குறித்து எச்சரிக்கை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்
பண ஆசையில் கிறிஸ்தவ சீடத்துவ வாழ்வைக் குறைத்து வாழ முயற்சிக்கும் அடிப்படைவாதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு, இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
கிறிஸ்து சபையில் ஒன்றிப்பு என்ற சபைக்கு மதம் மாறிய, மரியா கஸ்தூரி என்ற பெண், தன்னை கடவுளும், இயேசுவும் சீடத்துவ வாழ்வுக்கு அழைத்துள்ளனர் என்று கூறியுள்ளதை முன்னிட்டு, அடிப்படைவாதம் குறித்து, பிப்ரவரி 24, இத்திங்களன்று சிறப்பு அறிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
இறைவாக்கினர்கள், குணமளிப்பவர்கள், புதுமைகள் ஆற்றுபவர்கள் மற்றும், கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள் என்று, பணத்திற்காக, தங்களையே புகழ்ந்து அறிவித்துக்கொண்டிருப்பவர்கள் குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு, கர்தினால் இரஞ்சித் அவர்கள், இலங்கை கத்தோலிக்கரிடம் கூறியுள்ளார்.
உண்மையான கிறிஸ்தவர்களும், இயேசுவின் சீடர்களும், கடவுளை, மலிவான மாயவித்தைக்காரர் போன்று ஆக்குவதற்கு முயற்சிக்கும் எவரையும் பின்பற்றிச் செல்ல நினைக்க மாட்டார்கள் என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.
வீடு வீடாகச் சென்று விவிலியத்தைப் போதிப்பதற்கு கடவுளும் இயேசுவும் தன்னை அழைத்துள்ளனர் என்று கூறிவரும் மரியா கஸ்தூரி அவர்கள், கடவுளுக்கும், அவரது இறையாட்சிக்கும் ஏதாவது செய்ய விரும்புவதற்குத் தாகம் கொண்டிருப்பவர்கள், சனிக்கிழமைகளில் நடைபெறும் எம் செபங்களில் கலந்துகொள்ளுங்கள் என்றும் கூறி வருகிறார். இப்பெண்ணின் பெற்றோர் கத்தோலிக்கர். ஆனால், இவரும் இவரது கணவரும் கிறிஸ்து சபையில் சேர்ந்துள்ளனர் என்று யூக்கா செய்தி கூறுகிறது.
இலங்கையில் புத்த மதத்தினர் 70.2 விழுக்காட்டினர். இந்துக்கள் 12.6 விழுக்காட்டினர். முஸ்லிம்கள் 9.7 விழுக்காட்டினர் மற்றும், கிறிஸ்தவர்கள் 70.2 விழுக்காட்டினர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்