இந்தியாவில் அமைதி நிலவ கர்தினாலின் விண்ணப்பம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இந்தியாவில் நிலவும் அமைதியற்றச் சூழல் முடிவுக்கு வரவும், நாட்டில் அமைதியும், நீதியும் நிலவவும் வேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் பணியாற்றும் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் அவையின் புதிய அலுவலகத்தை கோவாவில் திறந்து வைத்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அவ்வேளையில் நிறைவேற்றியத் திருப்பலியில் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நிகழ்ந்த போராட்டங்களில், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நிகழ்ந்த தாக்குதல்கள் பெரும் கவலையை உருவாக்குகின்றது என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் தெரிவித்தார்.
கோவா மாநிலத்தில், புனித ஜோசப் வாஸ் பிறந்த இடமான Benaulim என்ற ஊரில் இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் திறப்பு விழாவின் ஆரம்பத் திருப்பலியில், இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Filipe Neri Ferrao, மற்றும், துணைத் தலைவரும், சென்னை மயிலை பேராயருமான ஜார்ஜ் அந்தோனிசாமி ஆகியோர், கர்தினால் கிரேசியஸ் அவர்களுடன் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றினர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்