பாகிஸ்தான் இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை கர்தினால் ஜோசப் கூட்ஸ் திறந்துவைத்தல் பாகிஸ்தான் இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தை கர்தினால் ஜோசப் கூட்ஸ் திறந்துவைத்தல் 

பாகிஸ்தான் இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஆலயம்

ஆலயத்தையும், பள்ளியையும் மீண்டும் கட்டியெழுப்ப இராணுவ வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பாகிஸ்தானில் அமைதிக்கும், மதங்களுக்கிடையே நிலவும் உரையாடலுக்கும், சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில், இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட புனித வின்சென்ட் தெ பால் ஆலயம், டிசம்பர் 18, இப்புதனன்று, கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

மிருகங்கள் அடையும் தொழுவத்தில், தீவனத் தொட்டியில், மனமுவந்து பிறந்த இயேசு, இந்த இறைவனின் இல்லத்திலும், நம் மத்தியில் தங்க மனமுவந்து வருகிறார் என்று, கர்தினால் கூட்ஸ் அவர்கள், தன் மறையுரையில் கூறினார்.

இந்த ஆலயத்தையும், அருகிலுள்ள பள்ளியையும், மீண்டும் கட்டியெழுப்ப, இராணுவ வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள், இந்நாட்டில், அமைதிக்கும், மதங்களுக்கிடையே நிலவும் உரையாடலுக்கும், சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன என்று, பங்கு அருள்பணியாளர் அந்தனி அப்ராஸ் (Anthony Abraz) அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவ சகோதரர்கள், சகோதரிகளுக்கு இராணுவத்தினர் எப்போதும் உதவி செய்வர் என்றும், அனைவருக்கும் கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்களை இராணுவத்தினர் சார்பாகக் கூறுவதாகவும், இவ்விழாவில் கலந்துகொண்ட இராணுவத் தளபதி கூறினார்.

ஏறத்தாழ 100 கத்தோலிக்க குடும்பங்கள் வாழும் மாலீர் இராணுவ முகாம் பகுதியில், கோவில் மற்றும் பள்ளியின் புதுப்பிக்கும் பணிகளை பாகிஸ்தான் இராணுவம், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது என்றும், புதுப்பிக்கப்பட்ட பள்ளியில் 350க்கும் அதிகமான இஸ்லாமிய மாணவர்கள் பயில்கின்றனர் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 December 2019, 16:38