இஸ்ரேல் அரசின் தாக்குதல்களுக்கு கர்தினாலின் கண்டனம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
இஸ்ரேல் அரசு, Droneகளைக் கொண்டு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் அண்மையில் மேற்கொண்ட தாக்குதல்களை, லெபனான் நாட்டு கர்தினால், Bechara Boutros Rai அவர்கள், வன்மையாகக் கண்டனம் செய்துள்ளார்.
பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில், Shiite பிரிவைச் சார்ந்த மக்கள் மீது, சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், வன்மையாகக் கண்டனம் செய்யப்படவேண்டியது என்று, மாறனைட் வழிபாட்டு முறை கர்தினால் Boutros Rai அவர்கள், ஆகஸ்ட் 27, இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டார்.
லெபனான் நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும் என்று, 2006ம் ஆண்டு, ஐ.நா. அவை வெளியிட்ட ஓர் ஒப்பந்தத்தை இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து மீறிவருகிறது என்றும், அத்துமீறிய இத்தகையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது என்றும் கர்தினால் Boutros Rai அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து வரும் மோதல்களில், அண்மையக் காலமாக, Droneகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், அப்பகுதியில் மேலும் பல வேதனைகளை உருவாக்கியுள்ளன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்