வத்திக்கான் வானொலி முன்னாள் இயக்குனர் அருள்பணி Borgomeo
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
கண்ணால் காணக்கூடிய உன் உடன்பிறந்தோருடன் நீ தொடர்பு கொள்ளாமல், கண்ணால் காணமுடியாத கடவுளோடு எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என்ற கேள்வியை, இயேசு சபை அருள்பணியாளர் Pasquale Borgomeo அவர்கள் அடிக்கடி சொல்வதுண்டு என்று, வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனரான இயேசு சபை அருள்பணியாளர், Federico Lombardi அவர்கள் ஒரு மறையுரையில் குறிப்பிட்டார்.
வத்திக்கான் வானொலியின் முன்னாள் இயக்குனராகப் பணியாற்றி, 2009ம் ஆண்டு ஜூலை 2, ம் தேதி இறையடி சேர்ந்த அருள்பணி Borgomeo அவர்களது மறைவின் பத்தாம் ஆண்டு நினைவு, ஜூலை 24, இப்புதனன்று, வத்திக்கான் வானொலி சிற்றாலயத்தில் சிறப்பிக்கப்பட்டது.
இத்திருப்பலியைத் தலைமையேற்று நடத்திய அருள்பணி Lombardi அவர்கள், 35 ஆண்டுகளாக, அருள்பணி Borgomeo அவர்கள் வத்திக்கான் வானொலியில் ஆற்றிய பணிகளையும், குறிப்பாக, 1985ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு முடிய அதன் இயக்குநராகப் பணியாற்றியதையும் தன் மறையுரையில் நினைவுகூர்ந்தார்.
திருத்தந்தையரின் குரலை உலகின் அனைத்து திசைகளிலும் ஒலிபரப்ப வேண்டும் என்பதில், அருள்பணி Borgomeo அவர்கள் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை, அருள்பணி Lombardi, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
இத்தாலியின் நேபிள்ஸ் நகரில், 1933ம் ஆண்டு பிறந்த Pasquale Borgomeo அவர்கள், 1948ம் ஆண்டு இயேசு சபையில் இணைந்து, 1963ம் ஆண்டு, தன் 30வது வயதில், ஓர் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றார்.
பிரான்ஸ் நாட்டின் Sorbonne பல்கலைக்கழகத்தில், முனைவர் பட்டம் பெற்ற Borgomeo அவர்கள், பல்வேறு மொழிகள் பேசும் திறமை கொண்டிருந்ததால், 1970ம் ஆண்டு முதல், வத்திக்கான் வானொலியில் பணியாற்ற துவங்கி, 1985ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு முடிய அவ்வானொலி நிலையத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.
உடல் நலம் குன்றிய நிலையில், 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி, தன் 76வது வயதில் அருள்பணி Borgomeo அவர்கள், உரோம் நகரின் மருத்துவமனை ஒன்றில் இறைவனடி சேர்ந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்