அயர்லாந்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு கிறிஸ்மஸ் செய்தி
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
அயர்லாந்தின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் இணைந்து, கிறிஸ்மஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆர்மாக் (Armagh) கத்தோலிக்கப் பேராயர் Eamon Martin அவர்களும், அயர்லாந்து திருஅவையின் ஆர்மாக் ஆங்லிக்கன் பேராயர் Richard Clarke அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், வீடற்றவர், புலம்பெயர்ந்தவர், தனிமையில் வாழ்பவர், தெருவில் குளிரில் வாடுபவர் போன்றோரை நினைத்துப் பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
அடுத்தவேளை உணவுக்கு எங்குச் செல்வது என்று சிந்தித்துக் கொண்டிருப்போர், காரணமின்றி, யாரும் தன்னைத் தாக்குவராரோ அல்லது வசைச் சொற்களை வீசுவாரோ என்று கவலைப்படுவோர், அந்நியர் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவோர் போன்றோர் பற்றியும், இந்த கிறிஸ்மஸ் காலத்தில் சிந்தித்துப் பார்க்குமாறும், கிறிஸ்தவத் தலைவர்களின் செய்தி கேட்டுக்கொண்டுள்ளது.
அயர்லாந்தில் வீடுகளின்றி இருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், குடியிருப்புகள் மற்றும் வீடற்றவர் குறித்த புள்ளி விபரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றபோதிலும், வீடற்றவரின் குறைதீர்க்கும் நடவடிக்கை மந்தமாகவே உள்ளது என்றும், அச்செய்தி கவலை தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்