எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்த கொல்கத்தா நகர் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்த கொல்கத்தா நகர் 

தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை

தன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.

கத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார்.

இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2018, 16:04