ஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு
மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்
ஜூலை,13,2018. “நற்செய்தி அறிவிப்பு 2018” எனப்படும், புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதை ஊக்குவிக்கும் தேசிய மாநாடு, ஆஸ்திரேலியாவின் Brisbane நகரில் ஜூலை 12, இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது.
Brisbaneல் முதன்முறையாக நடைபெறும் இத்தேசிய மாநாடு, அந்நாட்டின் நற்செய்தி அறிவிப்பு தேசிய மையத்தின் உதவியோடு நடைபெறுகின்றது.
ஜூலை 14, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இம்மாநாட்டில், ஏறத்தாழ 600 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
“நீங்கள் என்னோடு இணைந்திருங்கள்” (யோவா.15,4) என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாடு, தலைமைத்துவம், கலாச்சார மாற்றம், இளையோர், உடனிருப்பு, நற்செய்தி அறிவிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.
இம்மாநாடு பற்றிப் பேசிய Brisbane பேராயர் Mark Coleridge அவர்கள், சமூகங்களில் கிறிஸ்துவின் முகத்தைத் தியானிப்பதற்குப் புதிய வழிகளைக் கண்டுணரவும், அதன் வழியாக, மறைப்பணியில் புதிய பாதைகளைத் தொடரவும், கத்தோலிக்கருக்கு இம்மாநாடு உதவும் என்று தெரிவித்தார்.
நியுசிலாந்து, கானடா, கம்போடியா, ஆகிய நாடுகளின் முக்கிய திருஅவை பிரதிநிதிகள் இம்மாநாட்டில் உரையாற்றுகின்றனர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்