இனியது இயற்கை – காட்டுத் தீ
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்டார்ட்டிக்கா தவிர, உலகின் எல்லாக் கண்டங்களிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. காட்டுத்தீ தொடங்குவதற்கான நான்கு முக்கியமான இயற்கைக் காரணங்கள், மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழுவதனால் ஏற்படும் தீப்பொறி, தானாகத் தீப்பற்றுதல் என்பனவாகும். காய்ந்த மரங்களும், செடிகளும் அதிக வேகத்தில் உராய்வதனாலும் காட்டுத்தீ பற்றுகிறது. ஆனாலும், பல காட்டுத்தீக்கள் ஏற்படுவதற்கு மனிதருடைய நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன. தீவைத்தல், அணைக்காமல் எறியப்படும் சிகரெட்டுத் துண்டுகள், கருவிகளில் இருந்து உருவாகும் தீப்பொறி, மின்சாரக் கம்பிகளில் ஏற்படும் மின்பொறி என்பன இவ்வாறான காரணங்கள்.
இயற்கை மாசுபாடு
நெருப்பு அனைத்துப் பொருளையும் கரியாக மாற்றிவிடும். எனவே பூமியில் உள்ள கார்பனின் அளவை நெருப்பு அதிகரிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகின்றது. மேலும் இத்தீ அணைய அதிகநேரம் எடுத்துக்கொள்வதால் சுற்றுச்சூழல் காற்று முழுவதுமாக மாசுபட்டுவிடும். இது எழுப்பும் கருப்புப் புகை மழை மேகத்தையும் பாதிப்புக்குள்ளாக்கும். இது போன்ற காட்டுத்தீ விபத்துகளின் வழியே வெளியாகும் பசுமைக் குடில் வாயு, புதைபடிம எரிபொருள் பயன்பாட்டின் மூலம் வெளியாகும் வாயுக்களோடு சேர்ந்து மேலும் அதிகமாகவே புவி வெப்பமயமாதலில் பங்கு வகிக்கும். இதனால், புவி வெப்பநிலை அதிகமாவதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரிக்கும். இனி வரும் ஆண்டுகளில் காட்டுத் தீ, வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்கள் முன்னெப்போதையும்விட அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் ஆண்டுக்கு ஆண்டு, புவியின் வெப்பநிலையை அதிகப்படுத்துவது, அதன் விளைவாக கோடைக்கால வறட்சி அதிகரிப்பது ஆகியவை இந்தப் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக காட்டுத் தீ விபத்துக்களின் வீரியமும் அதிகமாகியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்