இனியது இயற்கை - தென்மேற்குப் பருவக் காற்று
மெரினா ராஜ்- வத்திக்கான்
இந்தியாவின் தென் பகுதியில் இருந்து வீசுவதால் தென் மேற்கு பருவக் காற்று என்று அழைக்கப்படும் இக்காற்று, ஏப்ரல் மே போன்ற அதிக வெப்பமான கோடைகாலங்களில் வீசுகின்றது. இக்காலங்களில் நிலப்பகுதியில் உள்ள காற்றானது படிப்படியாக ஈரப்பதம் குறைந்து, அதிகமாக வெப்பமடைந்து, சுமார் 5 கிலோமீட்டர் உயரம்வரை மேல் நோக்கிச் செல்கின்றது. அந்த வெற்றிடத்தை நிரப்ப ஈரப்பதமான காற்று தென் அரைக் கோளப்பகுதியில் இருந்து தென் கிழக்காக வீசத் தொடங்குகின்றது. இக்காற்று நிலநடுக்கோட்டைக் கடக்கும்போது பூமியின் சுழற்சியினால் திசை மாற்றப்பட்டு தென்மேற்குத் திசையிலிருந்து இந்தியாவின் நிலப்பரப்பை நோக்கி தென்மெற்கு பருவக்காற்றாக வீசுகிறது.
ஈரப்பதமான இக்காற்றால் ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவ மழையும் பருவக்காற்றும் கிடைக்கின்றன. இப்பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலை என்னும் தென் இந்தியாவின் மிக உயரமான மலைகளில் மோதி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மேற்குக் கடற்கரைக் கடலோரப் பகுதிகளுக்கு அதிக மழையைத் தருகிறது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் கிழக்கே உள்ள தமிழ்நாட்டில் வறண்ட காற்றாக வீசுவதால் தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசமாக உள்ளது. தெற்கே வீசும் தென்மேற்கு பருவக்காற்று அந்தமான், நிக்கோபார் தீவுகள்,வட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான அஸ்ஸாம், நாகாலாந்து ஆகியவற்றிற்கு மழையைத் தருகின்றது.
ஈரப்பதம் குறைந்து வறண்ட காற்றாக வீசி குறைவான மழைப் பொழிவை இராஜஸ்தான் பகுதிகளுக்கு தருவதால் அப்பகுதி தார் பாலைவனமாக காட்சியளிக்கின்றது. கோடை கால முடிவில் தொடங்கும் இப்பருவக்காற்று இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் பகுதிகளில் தொடங்கி, வடக்கு நோக்கி நகர்ந்து தென்னிந்தியா முழுவதும் பரவி இந்தியாவிற்கு நல்ல மழைப் பொழிவைத் தருகிறது. தென்மேற்கு பருவக்காற்றினால் ஏற்படும் மழைப்பொழிவின் அளவு ஏறக்குறைய எல்லா இடங்களிலும் ஒரே அளவாக இருக்கும். (இணையதள உதவி)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்