உலக குற்றவியல் நீதிமன்றம் உலக குற்றவியல் நீதிமன்றம்  

உலக குற்றவியல் நீதி நாள், ஜூலை 17

உலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தில், இதுவரை ஏறத்தாழ 139 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மற்றும், ஏறத்தாழ 89 நாடுகள் அதனை நடைமுறைப்படுத்தியுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இக்காலத்தில் சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்ற அநீதியைக் களைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்ற அழைப்போடு, ஜூலை 17, இச்சனிக்கிழமையன்று, உலக குற்றவியல் நீதி நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

இவ்வாண்டில், "டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூக நீதி" என்ற தலைப்பில், இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதுபற்றிக் கூறியுள்ள ஐ.நா. அதிகாரிகள், பாரம்பரியக் குற்றவாளிகளைவிட, நவீனகால குற்றவாளிகள், தங்களின் செயல்பாடுகளுக்கு இணையதளத்தை அதிகமாகச் சார்ந்திருக்கும் இவ்வேளையில், இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

1998ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியன்று, உரோம் நகரில் உலக குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை, உலகிற்கு அறிவிக்கும் விதமாக, அது உருவாக்கப்பட்ட நாளான ஜூலை 17ம் தேதியை, உலக குற்றவியல் நீதி நாளாக ஐ.நா அங்கீகரித்துள்ளது.

உலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்தில் இதுவரை ஏறத்தாழ 139 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன மற்றும், அதனை ஏறத்தாழ 89 நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை நிலைநாட்டுவது, குற்றவாளிகள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவதை வலியுறுத்துவது, நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது, நீதிமன்றங்களின் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிப்பது போன்றவற்றை உறுதி செய்வதே  இந்த உலக நாளின் நோக்கமாகும்.

பயங்கரவாதம், மற்றும், குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டு, அமைதி மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிசெய்வது குறித்த விழிப்புணர்வு, உலக குற்றவியல் நீதி நாளில் ஏற்படுத்தப்படுகிறது. (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2021, 15:04